தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு கடத்திய ரூபாய் 20 லட்சம் மதிப்புள்ள போதை புகையிலை பறிமுதல்
செங்கோட்டை: தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு கடத்திய ரூபாய் 20 இலட்சம் மதிப்புள்ள போதை புகையிலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக கேரளா எல்லைப்பகுதியான செங்கோட்டை புளியரை வழியாக கேரளாவுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் காய்கறி,அரிசி,உள்ளிட்ட முக்கிய பொருட்கள் ஏற்றி செல்லப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நள்ளிரவு நேரங்களில் போலீசாருக்கு தெரியாமல் இங்கிருந்து செல்லும் வாகனங்களில் ஏற்றி செல்லும் சரக்குகளுக்கு அடிப்பகுதியில் எரிசாராயம்,கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்தி செல்லும் கும்பல்கள் கேரளாவில் சிக்கிக் கொள்ளும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.
இந்நிலையில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் ஆரியங்காவு மது விளக்கு சோதனை சாவடியில் இன்ஸ்பெக்டர் அஜித் குமார்,சப் இன்ஸ் பெக்டர் ரகுநாதன் ஆச்சாரி உள்ளிட்டோர் நடத்திய சோதனையில் தென்காசியிலிருந்து கொட்டாரக் கரைக்கு அரிசி ஏற்றி சென்ற லாரியில் கேரளாவில் தடை செய்யப்பட்ட 20 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருளான புகையிலைப் பொருட்கள் சுமார் 16 மூட்டை இருப்பது கண்டுப் பிடிக்கப்பட்டு பறிமுதல் செய்தனர்.
அதனைக் கடத்தி வந்த தென்காசி அய்யபுரத்தை சார்ந்த கந்தசாமி மகன் ஓட்டுனர் முத்துராஜ்,அவருடன் இருந்த பிரானூர் பார்டர் சாகுல் கமீது மகன் பீர் முகமது ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.அரிசி ஏற்றிவந்த லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.