தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி சாஸ்திரி பவன் முற்றுகை... சசிபெருமாள் உள்பட 20 பேர் கைது
கோயம்பேடு: தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி சாஸ்திரிபவன் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காந்தியவாதி சசிபெருமாள் உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய மக்கள் கூட்டமைப்பு மற்றும் மதுவுக்கு எதிரான அமைப்புகள் சார்பில் இன்று காலை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவுன் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்திற்கு காந்தியவாதி சசிபெருமாள் தலைமை தாங்கினார். பெண்கள் உள்பட சுமார் 20 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் மதுவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது பேசிய சசிபெருமாள், "தேசிய மதுக்கொள்கையை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் புதிதாக எலைட் மதுக்கடையை திறக்க கூடாது. ஏற்கனவே இருக்கும் மதுக்கடையை மூட வேண்டும். தமிழகத்தில் பூரண மதுக்கொள்கை அமல்படுத்த வேண்டும். இல்லையெனில் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் மதுஒழிப்பு போராட்டத்தை சேலத்தில் இருந்து தொடங்குவேன்" என்று தெரிவித்தார்.
இதனையடுத்து நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் பாண்டியன் மற்றும் போலீசார் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக சசி பெருமாள் உள்பட 20 பேரை கைது செய்தனர்.