போடியில் போட்டியிடுகிறார் ஜெயலலிதா? தொகுதி மாறும் ஓ.பி.எஸ்
தேனி: சட்டசபை தேர்தலில் தேனி மாவட்டம் போடி தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா போட்டியிடலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில், அங்கு ஒரு குழுவினர் முகாமிட்டுள்ளனர். அ.தி.மு.க.,வின் சாதக, பாதகங்கள் குறித்து அக்குழு ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
போடி தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ., அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். தேனி மாவட்டம், பெரியகுளத்தை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம். நிதியமைச்சர், முன்னாள் முதல்வர், அதிமுக தலைமைக்கு நெருக்கமானவர். இவர் மீது தொகுதி மக்கள் மட்டுமல்லாது தேனி மாவட்ட மக்களும் எக்கச்சக்கமான அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது.
எனவே ஓ. பன்னீர் செல்வம் தொகுதி மட்டுமல்லாது மாவட்டம் மாறியும் போட்டியிடுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெயலலிதா போடியில் போட்டியிடப்போவதற்கான அறிகுறியாக அங்கு வளர்ச்சிப்பணிகள் தீவிரமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதாவின் முதல் வெற்றி
1987ம் ஆண்டு எம்.ஜி.ஆர் மறைவிற்குப் பிறகு அண்ணா தி.மு.க. இரண்டாக பிளவுபட்ட போது 1989ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் சேவல் சின்னத்தில் ஜெயலலிதா போட்டியிட்டு வென்றார். அத்தொகுதியில் ஜெயலலிதா 57,603 வாக்குகளையும் அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க.வின் முத்து மனோகரனை விட 28,731 வாக்குகள் அதிகம் பெற்றார். முத்து மனோகரன் பெற்றது 28,872 வாக்குகள் ஆகும்.
2016ல் போடியில் போட்டி?
தற்போதைய அரசியல் சூழ்நிலை காரணமாக ஆர்கே நகர், ஸ்ரீரங்கம் தொகுதிகளில் மீண்டும் போட்டியிட விரும்பவில்லை என்று தெரிகிறது. எனவேதான் மீண்டும் போடியில் போட்டியிட ஜெயலலிதா முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் கசிந்துள்ளது.
வளர்ச்சிப்பணிகள் வெகு ஜோர்
இதை உறுதிப்படுத்தும் வகையில், அங்கு வளர்ச்சி பணிகள் முழு வீச்சில்நடக்கின்றன.இந்நிலையில் இத்தொகுதியில் சென்னையை சேர்ந்த 15 பேர் கொண்ட குழு முகாமிட்டுள்ளது. இக்குழுவினர் சில நாட்களுக்கு முன் போடி அருகே குரங்கணி சுற்றுலா மாளிகையில் தங்கி, வாக்காளர் பட்டியலை வைத்து ஆய்வு நடத்தினர்.கட்சி நிர்வாகிகள் சிலரை அழைத்து, அ.தி.மு.க., வின் வெற்றிவாய்ப்பு குறித்து வாக்குச்சாவடி வாரியாக விவரம் சேகரித்தனர்.
தகவல்கள் சேகரிப்பு
தி.மு.க.,-தே.மு.தி.க., கூட்டணி ஏற்பட்டால் போடி தொகுதியில் வெற்றி வாய்ப்பு எப்படி?' என கருத்து கேட்டு வருகின்றனர். நுாறு நாள் வேலை உறுதி திட்ட பயனாளிகளின் வங்கி கணக்கு எண் விவரங்களை, ஊராட்சி செயலர்கள் மூலம் சேகரித்துள்ளனர்.
ஓ.பன்னீர் செல்வம்
போடி தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏவான ஓ.பன்னீர் செல்வம், பெரியாறு அணை விவகாரத்தில் வாயை திறக்கவில்லை என்ற எண்ணம் தேனி மாவட்ட விவசாயிகளிடம் பரவலாக உள்ளது. கோயில் பூசாரி தற்கொலை வழக்கில் இவரது தம்பியும், பெரியகுளம் நகராட்சி தலைவருமான ஓ.ராஜாவின் பெயரும் சிக்கி உள்ளது. இவ்வழக்கு தற்போது திண்டுக்கல் கோர்ட்டில் நடந்து வருகிறது. தம்பி பிரச்னையையும், நம்பி வாக்களித்த மக்களையும் நட்டாற்றில் விட்டதால் ஓ.பி.எஸ்க்கு எதிர்ப்பு வலுத்த வண்ணமே உள்ளது.
பழநிக்கு மாறும் ஓ.பி.எஸ்
இதனால், போடியை விட்டு ஆண்டிபட்டி தொகுதிக்கு மாறலாம் என பன்னீர் யோசித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், சொந்த மாவட்டத்தில் பன்னீருக்கு எதிராக கடும் அதிருப்தி நிலவுவதால், பக்கத்து மாவட்டமான திண்டுக்கல்லில் பழநி தொகுதியை அவருக்கு ஒதுக்கி விடலாம் என்று தலைமை விரும்புகிறது என்று அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.