2017ல் ஜல்லிக்கட்டு நடக்காது? 2018ல் நடத்த அரசு தீவிரமாம்- சொல்கிறார் தமிழிசை
2018ம் ஆண்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்கும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் கூறியுள்ளார்.
காஞ்சிபுரம்: ஜல்லிக்கட்டு போட்டிகளை வைத்து மிகப்பெரிய அரசியலை நடத்தி வருகின்றனர் அரசியல் தலைவர்கள். அதிமுக, திமுக, பாஜக, விசிக, மதிமுக என பல கட்சித்தலைவர்கள் ஜல்லிக்கட்டு பற்றி பேசி அரசியல் செய்து வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு பற்றி தமிழக பாஜக தலைவர்கள் அளிக்கும் பேட்டிகள் சில நேரங்களில் பரபரப்பை ஏற்படுத்தும் அந்த பேட்டிகளை வைத்து மீம்ஸ் போட்டு கலாய்ப்பார்கள். 2014ம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழகத்தில் பாஜக தலைவர்கள் அதிக அளவில் ஜல்லிக்கட்டு போட்டி பற்றி பேசி வருகின்றனர்.
உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பாக விலங்குகள் நலஅமைப்பினர் அவர்களது வாதத்தை எடுத்து வைத்துள்ளனர். அதேசமயத்தில் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு என மத்தியஅரசு தனது வாதத்தை எடுத்து வைத்துள்ளது. இந்த ஆண்டு தமிழகத்தில் கண்டிப்பாக ஜல்லிக்கட்டு விழா நடைபெறும் என்று நவம்பர் 11ம் தேதி மதுரையில் பேட்டியளித்தார் மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.
ஜல்லிக்கட்டு பேட்டிகள்
கடந்த இரண்டு ஆண்டுகளாக டிசம்பர் மாதங்களில் ஜல்லிக்கட்டு பற்றி பேசி வரும் தமிழிசை, 2015ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் அளித்த பேட்டியில், தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்பட, மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், நான் மற்றும் தமிழக பாரதிய ஜனதா தலைவர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.
2016ல் உறுதியாக நடக்கும்
தமிழகத்தில் 2016 பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு போட்டியானது நடத்தப்படும். ஜல்லிக்கட்டு போட்டியானது நடத்தப்பட வேண்டும் என்று தமிழகத்தில் இருந்து ஒரு கோரிக்கை வந்தால், பிற மாநிலங்கள் மற்றும் நடிகர்கள், சமூக ஆர்வலர்களிடம் இருந்து எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கோரிக்கைகள் வருகிறது.
நற்செய்தி வரும்
அத்தனை எதிர்ப்புகளையும் மீறி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியானது நடைபெறும் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளார். பிரதமர் மோடி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த உணர்வுப்பூர்வமாக ஒப்புக் கொண்டு உள்ளார். 2016ம் ஆண்டு பிறப்பதற்கு முன்னதாகவே நற்செய்தியானது வரும். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று கூறினார்
2018ல் உறுதியாக நடக்கும்
இந்த நிலையில் இன்று காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2018ல் ஜல்லிக்கட்டை நடத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்று கூறியுள்ளார். 2018ல் ஜல்லிக்கட்டு நடக்கும் எனவும் உறுதியளித்துள்ளார். அப்போ போனமாதம் 2017 பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு நடக்கும் என்று மதுரையில் அளித்த பேட்டி பற்றி கேட்டால் என்ன பதில் சொல்வாரோ தமிழிசை.