8 நாட்களில் 21 ரயில்கள் ரத்து - இடார்சி தீவிபத்து எதிரொலியால் தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை: மத்திய பிரதேச மாநிலம் இடார்சி ரயில் நிலைய கட்டுப்பாட்டு அறை தீ விபத்தினைத் தொடர்ந்து 8 நாட்களில் தமிழகத்தில் 21 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்த தெற்கு ரயில்வே அறிவிப்பில், "இடார்சி ரயில் நிலையக் கட்டுப்பாட்டு அறையில் ஏற்பட்ட தீவிபத்தினால் நாளை மதுரை - டேராடூன்/சண்டிகர் வாரம் இருமுறை ரயில் ரத்தாகின்றது.
மேலும், வருகின்ற ஜூலை 7ம் தேதியன்று 3 ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. 7ம் தேதியன்று சென்னை எக்மோர் - பீகார் கயா வாராந்திர ரயில், திருவனந்தபுரம் - கோரக்பூர் ரப்தி சாகர் வாரம் மும்முறை ரயில், மதுரை - நிஜாமுதீன் சம்பர்க் கிராந்தி ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சப்ராவில் இருந்து புறப்படும் கங்கா காவேரி வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் ரயில், மன்னார்க்குடியில் இருந்து புறப்படும் மன்னார் குடி-பகத் கி கோதி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவையும் ரத்து செய்யப்படுகின்றன" என்று தெரிவித்துள்ளது.
இதனையடுத்து கடந்த 8 நாட்களில் தமிழகத்திலிருந்து செல்லும் 21 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் வட மாநிலங்களுக்குச் செல்லும் பயணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.