சேகர் ரெட்டி காரில் பறிமுதலான 24 கோடியும் புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள்.. ஐடி அதிகாரிகள் ஷாக்
சேகர் ரெட்டி காரில் பறிமுதல் செய்யப்பட்ட 24 கோடியும் புதிய ரூ.2000 நோட்டுக்கள் என ஐடி அதிகாரிகள் வட்டாரத்தில் தகவல் கசிந்துள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்லது.
சென்னை: போயஸ் கார்டனுக்கு நெருக்கமான சேகர் ரெட்டி காரில் வருமான வரித்துறை பறிமுதல் செய்த ரூ.24 கோடியும் புதிய ரூ2,000 நோட்டுகள் என்ற விவரம் வெளியாகியுள்ளது.
சென்னையை சேர்ந்த கான்டிராக்டர் சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். போயஸ்கார்டனுக்கு மிகவும் நெருக்கமான சேகர் ரெட்டிதான் தமிழக அரசின் பெரும்பாலான பணிகளை கான்டிராக்ட் எடுத்து செய்து வருகிறார்.
சேகர் ரெட்டியின் சென்னை வீடு, அலுவலகங்கள், காட்பாடி வீடு ஆகியவற்றிலும் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் சேகர் ரெட்டி வீட்டில் இருந்து ரூ170 கோடி ரொக்கம், 130 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதில் ரூ80 கோடிக்கு புதிய ரூ2,000 நோட்டுகள் பிடிபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதேபோல வேலூரில் நேற்று சேகர் ரெட்டி காரில் ரூ.24 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இவை அனைத்துமே புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் என்பதும் அதிர்ச்சியின் உச்சம். நாட்டு மக்கள் பணமின்றி தவிக்கும் நிலையில், வங்கி அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொண்டு இந்த சதிச் செயலை அவர் செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இது தொடர்பாக சேகர் ரெட்டியிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த தரகர்கள் மூலமாக தம்மிடம் இருந்த ரூ80 கோடி பழைய ரூ500, ரூ1,000 நோட்டுகளை புதிய ரூ2,000 நோட்டுகளாக மாற்றியதாக ஒப்புக் கொண்டிருக்கிறார் சேகர் ரெட்டி.