நாகை–காரைக்கால் மீனவர்கள் 26 பேர் சிறைபிடிப்பு... இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்
நாகை: கோடியக்கரை அருகே நாகை-காரைக்கால் மீனவர்கள் 26 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப் பட்டுள்ளனர்.
காரைக்கால் கிளிஞ்சல்மேட்டை சேர்ந்த பரமசிவம் என்பவருக்குச் சொந்தமான விசைப் படகில் 9 மீனவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். கடலில் ஒரு வாரம் தங்கி மீன் பிடித்து வர அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.
அந்தவகையில், நேற்றிரவு அவர்கள் கோடியக்கரை அருகே மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கே வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் எல்லை மீறி வந்து மீன் பிடிப்பதாகக் கூறி அவர்கள் 9 பேரையும் சிறை பிடித்தனர்.
இதேபோல், அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மேலும் இரண்டு படகுகளையும் அவர்கள் சிறை பிடித்தனர். மொத்தம் 26 தமிழக மீனவர்கள் சிறைப் பிடிக்கப் பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ள தகவல் காரைக்கால் மீன்வளத்துறை அலுவலகத்துக்கு கிடைத்துள்ளது. அவர்களை மீட்பதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணம் கடற்படை முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவார்கள் என தெரிகிறது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் மீனவர்களை நீதிபதி விடுதலை செய்வார்களா இல்லை சிறையில் அடைக்கப்படுவார்களா என்பது தெரிய வரும்.