9 பெண்களுடன் திருமணம்… 150 சவரன் நகைகள் மோசடி: போலி ஐ.பி.எஸ் அதிகாரியின் லீலைகள்
சென்னை: ஐ.பி.எஸ் அதிகாரி போல நடித்து 9 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதோடு, அவர்களிடம் இருந்து 150 சவரன் நகைகளையும் மோசடி செய்துள்ளார் ஒரு என்ஜீனியரிங் பட்டதாரி இளைஞர். நான் அவனில்லை பட சினிமா பாணியில் இளம்பெண்களை ஏமாற்றி மோசடி செய்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அயனாவரம் பழனி ஆண்டவர் கோவில் தெருவைச் சேர்ந்த பாலமணிகண்டன் (வயது 27). என்பவர்தான் இந்த மோசடி நபர். இவர் மீது, சென்னை கல்லூரி மாணவி ஒருவர் திடுக்கிடும் புகார் மனு ஒன்றை, சென்னை டி.பி.சத்திரம் போலீசில் கொடுத்தார்.
தன்னை ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி என்று பொய் சொல்லி, பாலமணிகண்டன் காதலித்தார் என்றும், அவர் தன்னை பதிவு திருமணம் செய்து, 90 சவரன் நகைகளை பறித்துக்கொண்டார் என்றும், புகாரில் தெரிவித்து இருந்தார். இதுதொடர்பாக டி.பி.சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாலமணிகண்டனை கைது செய்தனர். அவர் தற்போது புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பால மணிகண்டனைப் பற்றி தோண்ட, தோண்ட வரும் புதையலைப்போல போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளது.
பாலமணிகண்டன், பாலா, சூர்யா போன்ற பல்வேறு பெயர்களில், ஐ.பி.எஸ். அதிகாரியாக நடித்து, நிறைய பெண்களிடம் இணையதளம் மூலம் தொடர்பு கொண்டுள்ளார்.
பெரும்பாலும் டாக்டர் மற்றும் என்ஜீனியரிங் படித்த பெண்களிடம் மட்டும் பேசுவார். அவர்களிலும் பண வசதி படைத்தவர்களாக இருந்தால், அவர்களிடம், இனிக்க, இனிக்க பேசி வளைத்து போட்டுவிடுவார்.
முதலில் காதலித்து பின்னர் பதிவு திருமணமும் செய்து கொள்வார். அலைபாயுதே' சினிமா பாணியில் ரகசிய, பதிவு திருமணம்தான் செய்வார். திருமணம் செய்த பெண்ணுடன் சேர்ந்து வாழமாட்டார். ரகசியமாக உறவு மட்டும் வைத்துக்கொள்வது இவரது ஸ்டைல். பின்னர் அந்த பெண்களிடம் நகை மற்றும் பணத்தை மோசடி செய்து விட்டு, எஸ்கேப் ஆகி விடுவார். வீட்டிற்கும் சொல்ல முடியாமல் புகாரும் கொடுக்க முடியாமல் ஏமாந்த பெண்கள் மறைத்து விடுவதுதான் இந்த போலிக்கு சவுகரியமாக போய்விட்டது.
இப்படி பேசி பேசியே 1 பெண் டாக்டர், 2 பெண் என்ஜீனியர்கள், 2 கல்லூரி மாணவிகள் உள்பட 9 பெண்கள் இந்த போலியின் மாயவலையில் சிக்கி சீரழிந்துள்ளார் பால மணிகண்டன்.
கற்பை பறித்ததோடு மட்டுமல்லாது இந்த பெண்களிடம் இருந்து 150 சவரன் தங்க நகைகள் மற்றும் கார்களை பறித்துள்ளார்.
இந்த நபரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 65 சவரன் நகைகள், ஒரு கார் மட்டும் அவரிடம் இருந்து மீட்டுள்ளனர்.
மீதி நகைகள் மற்றும் கார்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை எழும்பூரில் பெண் என்ஜினீயர் ஒருவரையும் காதலித்து மணந்து, 40 சவரன் நகைகளை, பாலமணிகண்டன் மோசடி செய்துள்ளார். இதுதொடர்பாக எழும்பூர் போலீசாரும், அவர் மீது ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர். எனவே எழும்பூர் போலீசாரால், பாலமணிகண்டன் மீண்டும் கைது செய்யப்படுவார் என்று தெரியவந்துள்ளது.
பாலமணிகண்டனின் மோசடி லீலைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவந்த கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் ராமகிருஷ்ணன், உதவி கமிஷனர் ஜோஸ்தங்கையா, டி.பி.சத்திரம் இன்ஸ்பெக்டர் ரெஜிஸ்பாபு ஆகியோரை கமிஷனர் ஜார்ஜ், கூடுதல் கமிஷனர் ஆபாஷ்குமார், இணை கமிஷனர் தினகரன் ஆகியோர் வெகுவாக பாராட்டினார்கள்.
பாலமணிகண்டனின் தந்தை ரயில்வேயில் வேலை பார்க்கிறார். கவுரவமான குடும்பத்தைச் சேர்ந்த இவர் இதுபோன்ற செக்ஸ் உல்லாசம் மற்றும் நகை மோசடியில் ஈடுபட்டு தவறான பாதைக்கு போய்விட்டதாகவும் கூறப்படுகிறது.