தேர்தல் வருதுடோய்.... ஒரே நாளில் 29 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை...!
சென்னை: இந்தியாவின் 3 மாநில முதல்வர்கள் உள்பட 29 மத்திய அமைச்சர்கள் 16 ஆம் தேதி தமிழகம் வருகிறார்கள். மாவட்ட வாரியாக சென்று பொதுமக்களை அவர்கள் சந்திக்கிறார்கள்.
வெங்கையா நாயுடு, ரவிசங்கர் பிரசாத், ஹர்ஷவர்த்தன், ராதா மோகன்சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட 29 மத்திய அமைச்சர்களும், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, குஜராத் முதல்வர் ஆனந்திபென் படேல், ஹரியானா முதல்வர் மனோகர்லால் கத்தார் ஆகியோரும் தமிழகம் வருகிறார்கள்.
இதில், குஜராத் முதல்வர் ஆனந்திபென் படேல் சென்னையில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியிலும், ஹரியானா முதல்வர் மனோகர்லால் கத்தார் திருச்சி நிகழ்ச்சியிலும் கலந்துகொள்கிறார்கள்.
ஏனைய மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சியில் எந்தெந்த அமைச்சர்கள் பங்கேற்பார்கள் என்ற பட்டியல் தயாராகி வருகிறது. மாவட்டந்தோறும் சென்று மக்களை சந்தித்து மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விளக்கவும், மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பா.ஜ.க மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறும்போது, ‘‘தமிழகம் வரும் மத்திய அமைச்சர்கள் மாவட்டந்தோறும் சென்று பொதுமக்களை சந்தித்து துறை ரீதியான கோரிக்கைகளை பெறுகின்றனர். விவசாயிகளையும், மகளிர் அமைப்பு நிர்வாகிகளையும் சந்திக்கின்றனர். முன்னதாக, கட்சி நிர்வாகிகளையும் சந்திக்கிறார்கள்'' என்றார்.
மத்திய அமைச்சர்கள் நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக சென்று மக்களை சந்தித்து வந்தாலும், தமிழகத்திற்குத்தான் அதிக அளவில் 29 மத்திய அமைச்சர்கள் ஒரே நாளில் விஜயம் செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும், வரப் போகும் சட்டசபைத் தேர்தல்தான் முக்கிய காரணம்.