தமிழகத்தில் 3.56 லட்சம் "டுபாக்கூர் ரேஷன் கார்டுகளாம்... சொல்வது உணவுத் துறை அமைச்சர்தான்!!
சென்னை: தமிழகத்தில் கிட்டதட்ட 3 லட்சம் போலி குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.
மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்களின் செயல்பாடுகள் குறித்த மாநில அளவிலான ஆய்வுக் கூட்டம் சென்னையில் நேற்றி நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர் காமராஜ் பேசியதாவது:
தமிழகத்தில் இதுவரை 11 லட்சத்து 6 ஆயிரத்து 453 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 3 லட்சத்து 56 ஆயிரத்து 738 போலி அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ளன.
புதிய குடும்ப அட்டைகள் கோரி பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து 60 நாள்களுக்குள் அட்டைகள் வழங்கப்படும்.
பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளைக் களைவதற்கு, உணவுப் பொருள் வழங்கல்- நுகர்வோர் பாதுகாப்புத் துறை மூலமாக மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமைகளில் குறைதீர் முகாம்கள் நடத்தப்படுகின்றன.
இதுவரை நடத்தப்பட்ட முகாம்களில், 3 லட்சத்து 42 ஆயிரத்து 482 மனுக்கள் பெறப்பட்டு, அவற்றில் 3 லட்சத்து 26 ஆயிரத்து 629 மனுக்கள் அன்றைய தினத்திலேயே தீர்வு செய்யப்பட்டுள்ளன.
மீதமுள்ள 15 ஆயிரத்து 853 மனுக்கள் தீவிர ஆய்வுக்குப் பிறகு தீர்வு செய்யப்பட்டுள்ளன.
நுகர்வோர் வாங்கும் பொருள்களின் தரம் தொடர்பான குறைபாடுகள் குறித்து தொலைபேசி, மின்னஞ்சல் மூலம் உடனுக்குடன் தீர்வு காண மாநில நுகர்வோர் சேவை மையத்தை 044-28592828 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
அத்தியாவசியப் பொருள்களைக் கடத்துவோர் மீதும் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் 22 ஆயிரத்து 881 நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களில் 661 பேர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அமைச்சர் காமராஜ் கூறினார்.