கருணாஸ் உட்பட அதிமுக ஆதரவு எம்எல்ஏக்கள் மூவரும் மீண்டும் ஸ்டாலினுடன் சந்திப்பு! ஆளும் கட்சிக்கு ஷாக்
சென்னை: அதிமுக ஆதரவு எம்எல்ஏக்கள் மூவரும் மீண்டும் ஸ்டாலினுடன் சந்திப்பு நடத்தியுள்ளனர்.
அதிமுகவுக்கு ஆதரவளித்து வந்த கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் மீது கூவத்தூர் விவகாரம் தொடர்பாக தனியார் சேனல் நடத்திய ஸ்டிங் ஆபரேசனுக்கு பிறகு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதை இவர்கள் மறுத்தனர்.
இந்த நிலையில், மாட்டிறைச்சி தடை சட்ட விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு சரியில்லை என திமுக சட்டசபையில் வெளிநடப்பு செய்த நாளில் இம்மூவரும் வெளிநடப்பு செய்து ஆளும் கட்சிக்கு அதிர்ச்சியளித்தனர்.
இந்த நிலையில், திமுக செயல் தலைவர் ஸ்டாலினை மூவரும் நேரில் சந்தித்து பேசினர். குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்துக்கு அதிமுக ஆதரவு அளித்ததை இவர்கள் விமர்சனம் செய்தனர். இதற்காகவே ஸ்டாலினை சந்தித்ததாக கூறினர்.
இந்த நிலையில் இன்று மீண்டும் மூவரும் ஸ்டாலினை சந்தித்தனர். பேரறிவாளன் விடுதலை தொடர்பான பிரச்சினையை, சட்டசபையில் ஸ்டாலின் கிளப்பியதற்கு நேரில் பார்த்து நன்றி தெரிவிக்க வந்ததாக மூவரும் கூறினர்.