தமிழிசை சவுந்தரராஜனுக்கு எஸ்.எம்.எஸ் கொலைமிரட்டல் விடுத்த வழக்கு: 3 பேர் கைது
சென்னை: தமிழிசை சவுந்தரராஜனுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார். இதற்காக அவர் பிரசாரம் மேற்கொண்டு வரும் நிலையில், அவருக்கு சில தினங்களுக்கு முன்பு எஸ்.எம்.எஸ். மூலம் கொலை மிரட்டல் வந்தது.
தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து வாபஸ் பெறாவிட்டால் கார் மீது லாரி ஏற்றி கொன்றுவிடுவதாக அந்த மிரட்டல் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுபற்றி விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் தமிழிசை சவுந்தரராஜன் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மிரட்டல் விடுத்த நபர்களைத் தேடி வந்தனர்.
இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி எஸ்.எம்.எஸ். அனுப்பப்பட்ட செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தினார். அப்போது விருகம்பாக்கத்தை சேர்ந்த பார்த்தசாரதி மனைவி புவனேஸ்வரி, அவரது மகன் நாகராஜன், மகள் நாகவள்ளி ஆகியோர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு கொலை மிரட்டல் எஸ்.எம்.எஸ். அனுப்பியது தெரிந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். புவனேஸ்வரியிடம் போலீசார் விசாரித்த போது முன் விரோதத்தில் குன்றத்தூரை சேர்ந்த அலெக்சாண்டர் என்பவரை சிக்கவைக்க திட்டமிட்டு மிரட்டல் விடுத்ததாக தெரிவித்து உள்ளார்.
குன்றத்தூரில் நாங்கள் வாடகை வீட்டில் வசித்த போது ஏற்பட்ட தகராறில், அலெக்சாண்டர் எங்களுக்கு எதிராக சமாதான பேச்சு நடத்தினார். இதனால் அரசியல் பிரமுகருக்கு கொலை மிரட்டல் விடுத்து அவரை சிக்கவைக்க திட்டமிட்டோம். கடந்த சில நாட்களுக்கு முன்பு, அலெக்சாண்டர் பயன்படுத்தும் செல்போன் எண் தெரிந்தது.
நாங்கள் செல்போன் தொலைந்து விட்டதாக கூறி அலெக்சாண்டரின் சிம்கார்டு சர்வீசை நிறுத்துமாறு வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தெரிவித்தோம். அவர்களும் அதன் பயன்பாட்டை துண்டித்து விட்டனர்.
பின்னர் அதே சிம்கார்டு நிறுவன அலுவலகத்துக்கு சென்று அலெக்சாண்டர் பயன்படுத்திய அதே நம்பரை வாங்கினோம். இன்டர்நெட்டில் தேடிய போது தமிழிசை சவுந்திரராஜனின் செல்போன் எண் தெரிந்தது. எனவே அவருக்கு அதன்முலம் கொலை மிரட்டல் எஸ்.எம்.எஸ். அனுப்பினோம் என்று அவர்கள் கூறிஉள்ளனர்.
கொலைமிரட்டல் விடுத்த புவனேஸ்வரி, அவரது மகள் நாகவள்ளி, மகன் நாகராஜன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.