"பின்வாசல்" வழியாக புதுவை சட்டசபைக்குள் பாஜகவை கூட்டிச் சென்ற கிரண் பேடி!
புதுவை சட்டசபைக்கு பாஜகவை சேர்ந்த மூவர் நியமன எம்எல்ஏக்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
புதுவை சட்டசபைக்கு பாஜகவை சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகிய 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்து மத்திய அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதுச்சேரியில் 2016ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடங்களை பெற்று வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது. முதல்வர் நாராயணசாமிக்கும், ஆளுநர் கிரண்பேடிக்கும் ஏழாம் பொருத்தம்தான். மோதல் போக்கு நீடிப்பதால் நியமன எம்எல்ஏக்கள் நியமிக்கப்படவில்லை.
3 நியமன எம்.எல்.ஏ.க்களின் பெயர்களை வழக்கமாக புதுவையில் ஆளும் அரசு தேர்வு செய்து ஆளுநருக்கு அனுப்பி வைக்கும். அந்த பெயர்களை ஆளுநர் த்திய அரசுக்கு பரிந்துரை செய்வார். அதன்பின் அவர்கள் நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கப்படுவார்கள். ஆனால் நெல்லித்தோப்பு இடைத்தேர்தல், ஆளுநர் - முதல்வர் இடையேயான மோதலால் நியமன எம்எல்ஏக்கள் ஓராண்டுகளாக நியமனம் செய்யப்படவில்லை.
இந்தநிலையில் நியமன எம்எல்ஏக்களை மத்திய அரசு நியமித்துள்ளது. பாஜகவின் புதுவை மாநில தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளர் செல்வகணபதி ஆகியோர் பெயரை மத்திய அரசு பரிசீலனை செய்து வந்தது.
இதற்கு முட்டுக்கட்டை போட முதல்வர் நாராயணசாமி முயற்சி செய்ததார். நியமன எம்.எல்.ஏ.க் களை நியமிக்க தடை விதிக்கவேண்டும் என்று காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. லட்சுமிநாராயணன்,சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் இதற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதனைத் தொடர்ந்து 3 பேரையும் நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த தகவல் நேற்று அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நியமனம் தொடர்பாக புதுவை தலைமை செயலாளருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
புதுவையில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்போது மாநில அரசுக்கு தெரியாமல் மத்திய அரசு பாஜகவைச் சேர்ந்த சேர்ந்த 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்த விவகாரம் புதுவை ஆட்சியாளர்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவின் சாமிநாதன் கடந்த 2011, 2016 சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர், அவர் மீது இரண்டு வழக்குகள் உள்ளன. இப்போது நியமன எம்எல்ஏவாக சட்டசபைக்குள் நுழையப்போகிறார்.
எது எப்படியோ நியமன எம்எல்ஏக்கள் என்ற பெயரில் கொல்லைப்புற வாசல் வழியாக புதுவை சட்டசபைக்குள் நுழையப் போகிறது பாஜக. பாஜகவைச் சேர்ந்தவர்களை நியமன எம்எல்ஏக்களாக நியமித்ததன் மூலம் முதல்வர் நாராயணசாமிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார் கிரண் பேடி.