சென்னை வளசரவாக்கத்தில் கடத்தப்பட்ட 3 பள்ளி மாணவர்கள்.. வாழப்பாடியில் மீட்டது போலீஸ்
சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் மாயமான மூன்று பள்ளி மாணவர்களை வாழப்பாடியில் போலீசார் மீட்டனர்.
சென்னையில் சிறுவர், சிறுமியர் கடத்தப்படுவது அதிகரித்து வந்தது. இதைத் தொடர்ந்து சிறுவர், சிறுமியர் கடத்தல் தொடர்பான புகார்களை சீரியஸாக கருதி விசாரிக்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை வளசரவாக்கத்தில் பள்ளிக்குச் சென்ற 3 மாணவர்கள் வீடு திரும்பவில்லை என போலீசில் புகார் கொடுக்கப்பட்டிருந்தது. பள்ளி மாணவர்கள் சஞ்சய், அஜய், விஜய்பிரபாகரன் ஆகியோரை காணவில்லை என பெற்றோர் புகார் கொடுத்ததை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.
சிறுவர்களை மீட்கவும், குற்றவாளிகளை பிடிக்கவும் சென்னை மாநகர் முழுவதும் உஷார்படுத்தப்பட்டு, வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் கடத்தப்பட்ட சிறுவர்கள் வாழப்பாடியில் போலீசார் மீட்டுள்ளனர்.
பள்ளியில் விட்டுவிடுவதாக கூறி அடையாளம் தெரியாத நபர் மூன்று பேரையும் கடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.விசாரணைக்கு பின்னரே முழுமையான விவரம் தெரிய வரும்.