மனைவி, மகனுடன் புதுச்சேரி போய் தற்கொலை செய்து கொண்ட சென்னைவாசி
புதுச்சேரி: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் புதுச்சேரியில் உள்ள விடுதி ஒன்றில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்கள் மூவரும் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. வாழப்பிடிக்காமல் தற்கொலை செய்து கொண்டதாக கடிதம் எழுதி வைத்து விட்டு மூவரும் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர்.
தற்கொலை செய்து கொண்ட மூவரும் சென்னை போரூர் லட்சுமி நகரைச் சேர்ந்தவர். முத்துராமலிங்கம் அவரது மனைவி துளசி, மகன் பாலமுருகன் அவர்களின் பெயராகும்.
சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு திங்கட்கிழமை மாலையில் சென்ற அவர்கள் உருளையன்பேட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினர். இரவு முழுவதும் புதுவையை அவர்கள் சுற்றிப் பார்த்துள்ளனர்.
இந்த நிலையில் அவர்கள் தங்கிய அறையை செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்கு காலி செய்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அறையை காலி செய்யவில்லை. இதையடுத்து, அறையை விடுதிப் பணியாளர்கள் தட்டினர்.
வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், சந்தேகம் அடைந்த பணியாளர்கள் உருளையன்பேட்டை காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விடுதிக்கு வந்த போலீஸார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது 3 பேரும் இறந்து கிடப்பது தெரியவந்தது. அவர்களுக்கு அருகில் விஷ பாட்டிலும், மது பாட்டிலும் இருந்தன. அவற்றை கைப்பற்றிய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.
அந்த அறையில் இருந்த கடிதத்தில் நாங்கள் 3 பேரும் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம் எதுவும் இல்லை. யாரிடமும் விசாரணை நடத்த வேண்டாம். நாங்கள் 3 பேரும் சுயமாக எடுத்த முடிவு. எங்களுக்கு வாழ்வதற்கு பிடிக்கவில்லை. எனவே நாங்கள் தற்கொலை செய்து கொண்டோம். இது குறித்து கடலூரில் உள்ள எங்கள் உறவினரிடம் தகவல் தெரிவித்து விடுங்கள் என்று எழுதியிருந்தது.
இதுகுறித்து, கடலூரில் உள்ள உறவினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். உறவினர் வந்த பிறகே எதற்காக அவர்கள் தற்கொலை செய்து கொண்டனர் என்பது பற்றியும்3 பேர் குறித்த முழு விவரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். 3 பேரின் சடலத்தையும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.