நரபலி கொடுக்க 3 ஆந்திரா சிறுவர்கள் கடத்தலா? - சென்னையில் முகாமிட்டுள்ள போலீஸ் விசாரணை
ஆந்திர மாநிலத்தில் இருந்து கடத்தப்பட்ட மூன்று 6 வயது சிறுவர்கள் நரபலி கொடுப்பதற்காக கடத்தப்பட்டார்களா என்று போலீசார் சென்னையில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை : அனந்தபூரில் இருந்து கடத்தப்பட்ட மூன்று 6 வயது சிறுவர்கள் நரபலி கொடுப்பதற்காக சென்னைக்கு கடத்தி வரப்பட்டனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திரா மாநிலம் அனந்தபூர் மாவட்டம் கதிரி டவுன் பகுதியை சேர்ந்தவர் ஆஞ்சநேயலு. இவரது 6 வயது மகன் விகாஷ் கடந்த மார்ச் 12ம் தேதி கதிரி டவுன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உறவினரை பார்க்க சென்றபோது திடீரென மாயமானார். இதுகுறித்து ஆஞ்சநேயலு கதிரி டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் மாயமான சிறுவனை தேடி வருகின்றனர்.
இதே போன்று நல்ல செருவு பகுதியை சேர்ந்த அல்லாபகாஷினர் 6 வயது மகன் ஜெயனுல்லா விகாஷ் தொலைந்த 10 நாட்களில் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தபோது காணாமல் போயுள்ளார். இதுகுறித்து அல்லா பகாஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், கதிரிடவுன் அருகே உள்ள கும்மரவான்ஸ் பல்லி பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவரது மகன் சிவசாய் பள்ளி சென்று கொண்டிருந்த போது பைக்கில் வந்தவர்கள் கடத்திச் சென்றுள்ளனர்.
ஒரே கும்பலுக்கு தொடர்பா?
6 வயது சிறுவன் சிவசாய் கடத்திச் செல்லப்பட்டது குறித்து அவனின் தந்தை நாகராஜ் கதிரி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அடுத்தடுத்து 6 வயது சிறுவர்களே குறி வைத்து கடத்தப்படுவது குறித்து போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரே கும்பல் இந்த கடத்தலில் சம்பந்தப்பட்டிருக்குமோ என்ற சந்தேகமும் ஆந்திர போலீசாருக்கு வலுத்துள்ளது.
நரபலிக்காக கடத்தலா?
கடத்தப்பட்ட 3 பேரும் 6 வயது உடையவர்கள் என்பதால் நரபலிக்காக கடத்தப்பட்டதாக ஆந்திரா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்தரா, தெலங்கானா மாநிலங்களில் சிறுவர்களை தேடி வருகின்றனர்.
சென்னையில் முகாம்
2 தனிப்படைகள் கர்நாடகா மற்றும் கேரளாவுக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். உதவி ஆய்வாளர் ஹேமந்த் தலைமையிலான தனிப்படையின் நேற்று சென்னை வந்தனர். பின்னர் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து மூன்று சிறுவர்கள் குறித்து விசாரணை நடத்த சென்னை போலீஸ் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுகொண்டனர்.
தேடுதல் வேட்டை
இதனைத் தொடர்ந்து சென்னை மாநகர காவல் எல்லையில் சாலையில் பிச்சையெடுக்கும் 90க்கும் மேற்பட்ட சிறுவர்களை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர். மீட்கப்பட்ட சிறுவர்களில் மாயமான சிறுவர்கள் இருக்கிறார்களா? என ஆந்திர தனிப்படை போலீசார் ஆய்வு நடத்தினர். அதில் கடத்தப்பட்ட சிறுவர்கள் யாருமே இல்லை என்று தெரியவந்துள்ளது.
வேண்டுகோள்
மாயமான சிறுவர்கள் குறித்து இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்ல. புகைப்படத்தில் இருக்கும் சிறுவர்கள் பற்றிய விவரம் தெரிந்தவர்கள் அது குறித்து சென்னை மாநகர போலீசாரிடம் தெரிவிக்கலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.