சென்னை தனியார் பள்ளியில் 3 மாணவர்களுக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி: பெற்றோர்கள் பீதி
சென்னை: சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் மூன்று மாணவர்களுக்கு பன்றிக்காய்ச்சல் தாக்கியுள்ளதால் பெற்றோர்கள் மத்தியில் அச்சமும், பீதியும் நிலவுகிறது.
நாடு முழுவதும் பன்றிக்காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது. இந்தியா முழுவதும் இந்நோய்க்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருக்கிறார்கள்.
தமிழகத்திலும் இந்த நோய் வேகமாக பரவி வருகிறது. பன்றிக்காய்ச்சலுக்கு இதுவரை பத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கும் நிலையில், 300 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 150 பேர் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு திரும்பியுள்ளனர்.
குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களில் பன்றிக்காய்ச்சலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. பக்கத்து மாநிலங்களான ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பன்றிக்காய்ச்சல் நோயின் பாதிப்பு தமிழகத்தை விட கொஞ்சம் அதிகமாகவே காணப்படுகிறது. இதனால் எல்லையோர பகுதிகளில் மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
பன்றிக்காய்ச்சல் தொடர்பாக தமிழகம் முழுவதுமே பொதுமக்கள் மத்தியில் பீதி நிலவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தவும், நோய் வராமல் தடுக்கவும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
மாணவர்களுக்கு விழிப்புணர்வு
சென்னையில் உள்ள பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு பன்றிக்காய்ச்சல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. லேசான காய்ச்சல் ஏற்பட்டாலே பள்ளிக்கு வரக்கூடாது என்றும், விடுமுறை எடுத்துவிட்டு வீட்டில் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் மாணவ, மாணவிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பள்ளி நிர்வாகம் அறிவுறுத்தல்
தேர்வு நடைபெறும் நேரங்களில் மாணவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டாலும் கட்டாயப்படுத்தி அவர்களை பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. காய்ச்சலால் தேர்வு எழுத முடியாமல் போகும் மாணவர்களுக்கு வேறு நாளில் தனியாக தேர்வுகள் நடத்தப்படும் என்றும் பள்ளி நிர்வாகங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு பாதிப்பு
இந்நிலையில் வேளச்சேரியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அப்போது 3 மாணவர்களுக்கு பன்றிக்காய்ச்சல் நோய் அறிகுறிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெற்றோர்களுக்கு எஸ்.எம்.எஸ்
இதையடுத்து சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம், மாணவர்களின் பெற்றோர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலமாக சில தகவல்களை அனுப்பியுள்ளனர். அதில், மாணவர்களுக்கு பன்றிக்காய்ச்சல் நோய் அறிகுறி இருப்பதால் உங்கள் குழந்தைகளை சில நாட்கள் பள்ளிக்கு அனுப்புவதும், அனுப்பாததும் உங்கள் விருப்பம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பெற்றோர்கள் பீதி
இதனால் வேளச்சேரியில் உள்ள அந்த பள்ளிக்கு இன்று குறைவான மாணவர்களே வந்திருந்தனர். பெரும்பாலான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை. இதன் காரணமாக அப்பகுதியில் பெற்றோர் மத்தியில் பீதி நிலவுகிறது.
தீயாய் பரவும் பன்றிக் காய்ச்சல்... பதற வேண்டாம்: முன்னெச்சரிக்கையாக என்ன செய்யலாம்?