உச்சகட்ட பரபரப்பில் அதிமுகவின் 3 அணிகளும்.. கிளைமாக்ஸ் நெருங்குகிறது?
சென்னை: இன்றைய நிலவரப்படி, பிக்பாஸ் ஓவியாவுக்கு ஓட்டு போட துடிக்கும் ரசிகர்களையே மிஞ்சும் வகையில் பரபரப்பாக இருப்பது அதிமுகவின் மூன்று அணிகளும்தானாம். மியூசிக் சேர் ஆட்டத்தில், பாடலை எப்போது நிறுத்துவார்கள்..? எப்போது நாற்காலியை பிடிக்கலாம் என்ற பதற்றத்தோடு இருக்கும் போட்டியாளர்களுக்கு சற்றும் குறைவில்லாதது அதிமுகவின் மூன்று அணிகளிடம் இருக்கும் பரபரப்பு.
60 நாட்கள் கெடு தருவதாகவும் அதற்குள், எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் அணிகள் இணைய வேண்டும் என்றும் அறிவித்தார் டிடிவி தினகரன். இந்த இடைவெளிக்குள் லஞ்ச வழக்கில் திகார் சிறைக்கு சென்றார் அவர்.
சசிகலா, பெங்களூர் சிறையிலும், தினகரன் திகார் சிறையிலும் இந்த நேரத்தில், ஆட்சி செய்த எடப்பாடி அணி பலம் பெற்றது.
நிலைமை தலைகீழ்
டிடிவி தினகரன் சிறையிலிருந்து வெளியே வந்தபோது விரல் விட்டு எண்ணக் கூடிய அளவுக்கான அதிமுகவினர்தான் அவரை வரவேற்றனர் என்பதில் இருந்தே, இங்கு நிலைமை முன்பு போல இல்லை என்பதை அவர் புரிந்து கொண்டார். ஆனால் படிப்படியாக அதிருப்தியாளர்களை ஈர்ப்பதில் ஓரளவு வெற்றி பெற்ற டிடிவி தினகரனுக்கு இப்போது சுமார் 37 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது.
எடப்பாடி ரெடியில்லை
அதேநேரம், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிட்டு, முதல்வர் பதவிக்கு குறி வைத்துவிட்டதாக தினகரன் மீது கோபத்தில் உள்ள எடப்பாடியார் தினகரனை ஒதுக்குவதில்தான் குறியாக உள்ளார். தினகரன் தலையெடுத்தால் முதல்வர் பதவி தனக்கு இல்லை என்பதை உணர்ந்துள்ள எடப்பாடியார். இதனால் மோதிப் பார்த்து பதவி போனால் கூட பரவாயில்லை என்ற நிலையில் அவர் உள்ளார்.
ஓபிஎஸ்சுக்கும் ஆப்பு
ஓ.பி.எஸ் கோஷ்டியின் எம்எல்ஏக்கள் பலத்திற்கு, அவர்களின் கோரிக்கைகள் மிக அதிகம் என நினைக்கிறார் எடப்பாடியார். கட்சியின் பொதுச்செயலாளராக ஓ.பி.எஸ் விரும்புவதாகவும், அவரது கோஷ்டியினருக்கு அமைச்சர் பதவி தர கோரியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து ஓ.பி.எஸ் தரப்பையும் பக்கத்தில் சேர்ப்பதில்லை எடப்பாடி தரப்பு.
உச்சகட்ட பரபரப்பு
தினகரன் அதிமுக கட்சி அலுவலகம் வந்தால் கட்சி கட்டுப்பாடு அவருக்கே இருப்பதாக முடிவாகிவிடும் என அச்சப்படுகிறது எடப்பாடி பழனிச்சாமி தரப்பு. கூடுதலாக ஒரு போட்டியாளரா என கலங்குகிறது ஓபிஎஸ் தரப்பு. எனவே எடப்பாடி, ஓபிஎஸ் தரப்பினர் தங்கள் ஆதரவாளர்களுடன் உச்சகட்ட ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். கட்சி அலுவலகம் செல்லும்போது கலவரம் நடைபெற வாய்ப்பு இருக்குமோ, கைது நடவடிக்கை இருக்குமோ என்றெல்லாம் அச்சத்திலுள்ள தினகரனும் தொடர்ந்து தனது ஆதரவாளர்களோடு ஆலோசனை நடத்தி வருகிறார். இதனால் கட்சிக்குள் உச்சகட்ட பரபரப்பு நிலவுகிறது.