வருமான வரித்துறை அதிகாரிக்கு மிரட்டல் விவகாரம்... 3 தமிழக அமைச்சர்களும் நாளை முன்ஜாமீன் மனு தாக்கல்
வருமான வரித்துறை அதிகாரிக்கு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் எந்நேரத்திலும் தாம் கைது செய்யப்படலாம் என்ற சூழல் நிலவி வருவதால் தமிழக அமைச்சர்கள் 3 பேரும் முன்ஜாமீன் கேட்டு நாளை மனு தாக்கல் செய்யவுள்ளனர்.
சென்னை: அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக தமிழக அமைச்சர்கள் 3 பேரும் கைது செய்யப்படலாம் என்பதால் அவர்கள் முன்ஜாமீன் கேட்டு நாளை மனுதாக்கல் செய்யவுள்ளனர்.
ஆர்கே நகர் இடைத்தேர்தலின்போது பணப்பட்டுவாடா செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார் உள்ளிட்டோரின் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது விஜயபாஸ்கரின் வீட்டில் சோதனை நடைபெற்றபோது அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனும், சரத்குமாரின் வீட்டில் சோதனையின்போது கடம்பூர் ராஜுவும் பிரச்சினை செய்தனர்.
ஆவணத்தை அழிக்க முயற்சி
இந்நிலையில் விஜயபாஸ்கரின் வீட்டில் சோதனையின்போது அங்கு வந்த முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரத்திடம் முக்கிய ஆவணத்தை விஜயபாஸ்கர் கொடுத்ததாகவும், அதை ஆடைக்குள் மறைத்து கொண்டு சென்றபோது அதிகாரிகள் பார்த்து பறிமுதல் செய்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.
அதிகாரிக்கு மிரட்டல்
பாதுகாப்பை மீறி உள்ளே சென்று அதிகாரிகளை சோதனை செய்ய விடாமலும், பெண் அதிகாரியை மிரட்டியதோடு ஆபாசமாக பேசியதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னை காவல்துறை ஆணையர் கரண் சின்ஹாவிடம் புகார் செய்தனர்.
வழக்குப் பதிவு
இதையடுத்து போலீஸ் ஆணையரின் உத்தரவின்பேரில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், காமராஜ், தமிழக டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் உள்ளிட்டோர் மீது அபிராமபுரம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எந்த நேரத்திலும் கைது
இதனால் அவர்கள் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ளது. இதனால் முன்ஜாமீன் கேட்டு 3 அமைச்சர்களும் நாளை மனு தாக்கல் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.