காகித ஆலையில் விபரீதம்... மின்சாரம் தாக்கி 3 தொழிலாளர்கள் பலி... சிவகாசி அருகே!
சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை தனியார் காகித ஆலையில் மின்சாரம் தாக்கி மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசி அருகே சுபாஷ்சிங் மற்றும் ஹோமா ஆகியோருக்கு சொந்தமான காகித ஆலை உள்ளது.இந்த ஆலை கடந்த இருமாதங்களாக மூடப்பட்டிருந்ததாம். இந்நிலையில் ஆலையை மீண்டும் இயக்க வைக்க ஒவ்வொரு பகுதியாக பராமரிப்பு பணிகள் சிலநாள்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை மின்சாரம் தொடர்பான பராமரிப்பு பணிகள் நடைபெற்றது.
இதில் வடமலாபுரம் பரத்தாழ்வார் மகன் மாரீஸ்வரன்(46), விளாத்திகுளம் கருப்பசாமி் மகன் இளையராஜா(34)ஆகிய இரு எலெக்ட்ரீசியனுடன், கண்காணிப்பாளர் நமஸ்கரித்தான்பட்டி ராமர் மகன் சர்க்கரை(36) ஆகியோர் பணியில் ஈடுபட்டிருந்தனர்.ஆலையின் இயந்திர பகுதியை விடுத்து, ஆலை வளாகத்தில் மின்விளக்குகள் பழுதுநீக்குதல் மற்றும் புதிய விளக்குகள் பொருத்தும் பணி நடைபெற்றது.
மாலை சுமார் 3.30 மணியளவில் மின்விளக்கு பொருத்துவதற்கு உயரமான இரும்பாலான ஏணியை மூவரும் கையால் தள்ளிக்கொண்டு சென்றபோது,ஆலை வளாகத்தில் சென்று கொண்டிருந்த உயர் அழுத்த மின்கம்பி காற்று அடித்ததால், ஏணியின்மீது மின்கம்பி தட்டியதாம்.இதையடுத்து ஏணியில் மின்சாரம் தாக்கியதில் ஏணியை கையால் பிடித்திருந்த மூவரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து திருத்தங்கல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.