தமிழகத்தைக் குறி வைக்கும் ஐஎஸ்ஐஎஸ்.. பீதி கிளப்பும் "ஐபி" ரிப்போர்ட்
சென்னை: தமிழகத்திலிருந்து அதிக அளவில் ஆட்களை இழுக்கும் முயற்சியில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் இறங்கியிருப்பதாக உளவுத்துறை (ஐபி) தெரிவித்துள்ளது. பெங்காலி மொழிக்கு அடுத்து தமிழில்தான் அதிக அளவில் தனது பிரசுரங்களை அது வெளியிட்டு வருவதாகவும் ஐபி கூறுகிறது.
இந்தத் தகவல் நேற்று ராஜ்யசபாவில் தெரிவிக்கப்பட்டது. பிராந்திய மொழிகளில் தனது இயக்கம் குறித்த செய்திகளை துண்டுப் பிரசுரமாக பிரசுரித்து வருகிறதாம் இந்த தீவிரவாத இயக்கம்.
இணையதளத்தில் அதிக அளவிலான செய்திகளை பெங்காலியிலும், தமிழிலும்தான் வெளியிட்டு வருகின்றனராம். இதன் மூலம் இந்த இரு மாநிலத்தவரை பெருமளவில் தன் பக்கம் இழுப்பதே அதன் நோக்கமாக அறியப்படுகிறது.
தமிழகத்திற்கே அதிக குறி
ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் தமிழகத்திற்கே அதிக முக்கியத்துவம் தருகிறதாம். இந்தியாவிலிருந்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்த முதல் நபர் தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆவார். கிட்டத்தட்ட 30 ஐபி அறிக்கைகள், தமிழகத்தைச் சேர்ந்தவர்களை அதிக அளவில் ஐஎஸ் அமைப்பு இழுக்க முயல்வதாக எச்சரிக்கின்றன.
ஏன் தமிழ்நாடு?
முன்பு லஷ்கர் இ தொய்பா அமைப்புக்கு அதிகம் பேர் இங்கிருந்து இழுக்கப்பட்டனர். அதேபோல அல் உம்மா அமைப்பிலும் பலர் சேர்ந்தனர். அல் உம்மாவின் செயல்பாடுகள் தமிழக அளவில்தான் இருந்தன.
லஷ்கர் கனவு தகர்ந்தது
லஷ்கர் இ தொய்பா அமைப்பை தமிழகத்தில் பெரிய அளவில் வளர்த்து விட பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பு திட்டமிட்டது. ஆனால் கொழும்பில் உள்ள அதன் தூதரக அதிகாரியின் செயலால் அந்த கனவு தகர்ந்து போனது. தமிழகத்தில் அதன் நடவடிக்கைகள் தற்போது கிட்டத்தட்ட நின்று போய் விட்டன.
தமிழகம்- கேரளம்
இந்த நிலையில்தான் தமிழகத்திலும், கேரளத்திலும் தனக்கு சாதகமான ஆட்கள் கிடைப்பார்கள் என்பதை உணர்ந்து ஐஎஸ் அமைப்பு உள்ளே குதித்துள்ளது. தமிழகத்திலிருந்து காஜா பக்ருதீன் என்பவர் ஒர்க் பெர்மிட் மூலம் சிங்கப்பூர் சென்று அங்கருந்து சிரியாவுக்குப் போய், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைந்தார். அவரைப் பற்றிய தகவல்கள் இல்லை. ஆனால் அவர் தொடர்ந்து ஐஎஸ் அமைப்பில்தான் இருப்பதாக கூறப்படுகிறது.
நுழைவாயில்
தென் மாநிலங்களுக்கான நுழைவாயிலாக தமிழகத்தைத் தீவிரவாதிகள் கருதுகிறார்கள். தமிழகத்தில் காலூன்றினால் அப்படியே படிப்படியாக கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா என வியாபித்து விடலாம் என்பது தீவிரவாதிகளின் திட்டமாக உள்ளது.
கேரளாவில் அதிகம்
கேரளாவில் தீவிரவாத கருத்துக்களைக் கொண்ட இளைஞர்கள் பலர் இருப்பதால் அவர்களை இழுப்பதிலும் தீவிரவாத இயக்கங்கள் ஆர்வமாக உள்ளனர். அதேபோல கர்நாடகா, தெலுங்கனாவிலும் இவர்களுக்கு ஏற்ற ஆட்கள் நிறையவே கிடைக்கிறார்களாம.்
வடக்கில் லஷ்கர் ... அல் கொய்தா
வட இந்தியாவில் லஷ்கர் இ தொய்பா, அல் கொய்தா போன்ற அமைப்புகளுக்கு அதிக அளவில் ஆட்கள் உள்ளதால் ஐஎஸ் அமைப்பு தனது பார்வையை தென் இந்தியாவின் பக்கம் திருப்பியுள்ளதாக கூறுகிறார்கள்.