ஆன்லைன் மூலம் லாட்டரி குலுக்கல் – நூதன முறை சூதாட்டத்தில் ஈடுபட்ட 30 பேர் கைது!
திருப்பூர்: திருப்பூரில் நூதன முறையில் லாட்டரி சூதாட்டம் நடத்திய 30 பேர் கைது போலீசாரால் செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவான இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பூர் நகரிலுள்ள காங்கேயம் சாலையில் பள்ளக்காட்டுப்புதூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் நூதன முறை லாட்டரி சூதாட்டம் நடப்பதாக திருப்பூர் நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதைதொடர்ந்து திருப்பூர் தெற்கு உதவி கமிஷனர் மணி இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் உள்ளிட்ட போலீசார் சென்று குறிப்பிட்ட அந்த வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
அங்கே நூதன முறையில் சூதாட்டம் நடத்திய திருப்பூர் மற்றும் பவானி, பழனி, கோவை, ஈரோடு பகுதியை சேர்ந்த வாடிக்கையாளர்கள் 30 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளிகளான சந்தோஷ், சதீஷ் ஆகியோர் தப்பி விட்டனர்.
இந்த மோசடி குறித்து போலீசார் "பரிசு சீட்டு சூதாட்டம் போல் ஒன்று முதல் ஒன்பது வரையுள்ள எண்ணில் தேவையான எண்களை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து ஒரு எண்ணுக்கு ரூபாய் 12.50 வீதம் பணம் வாங்கிக் கொள்கின்றனர்.
பணம் செலுத்தியவர்களுக்கு கையால் எழுத்தப்பட்ட சீட்டு வழங்குகின்றனர். கால் மணி நேரத்துக்கு ஒரு முறை குலுக்கல் நடத்தி பரிசுக்குரிய எண் தேர்வு செய்து ஆன் லைன் மூலம் அறிவிக்கின்றனர்.
இதில் யாருமே பணம் கட்டாமல் உள்ள எண்களை தேர்வு செய்து குழுக்கள் மூலமாக விற்பனை செய்யப்படாமல் இருக்கும் எண்ணுக்கு பரிசு விழுந்ததாக அறிவித்து பரிசு பணத்தை தங்களே எடுத்துவிடுகின்றனர்.
இதுபோல லட்சக்கணக்கான ரூபாய் சுருட்டப்பட்டுள்ளது. இத்து தவிர திருப்பூரில் பல பகுதிகளில் கிளை அலுவலகங்கள் அமைத்து இம்மோசடியில் ஈடுபட்டு வருவதும் அதிகமாக விற்காத எண் எது என உரிமையாளருக்கு மொபைல் போனில் ரகசியமாக தெரிவிக்கப்படுகிறது. அந்த எண் அவர்கள் வைத்திருக்கும் கம்ப்யூட்டர் மூலம் ஆன் லைனில் பரிசுக்குரிய எண்ணாக அறிவித்து வாடிக்கையாளர்களை மோசடி செய்தது தெரிய வந்துள்ளது" என்று கூறினர்.