கூடங்குளம் முதல் அணு உலையில் இதுவரை 300 கோடி யூனிட் மின்சாரம் தயாரிப்பு
நெல்லை: கூடங்குளத்தில் உள்ள முதல் அணு உலையில் இதுவரை 300 கோடி யூனிட் மின்சாரம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அணுமின் நிலைய வளாக இயக்குனர் ஆர்.எஸ்.சுந்தர் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி அணு மின் நிலையம் அமைக்கப்பட்டது. அங்கு 2 அணு உலைகள் அமைக்கப்பட்டது. அதில் முதல் அணு உலையில் மின் உற்பத்தி துவங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் கூடங்குளத்தில் மேலும் 2 அணு உலைகளை அமைப்பது தொடர்பான ஒப்பந்தத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், ரஷ்ய அதிபர் புதினும் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் ஆர்.எஸ்.சுந்தர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கூடங்குளம் அணு மின் நிலைய முதல் உலையில் இருந்து இதுவரை 300 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்துள்ளோம். 300 கோடி யூனிட் மின்சாரத்தில் 50 சதவீத மின்சாரம் தமிழகத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. மின் உற்பத்தி மூலம் இதுவரை ரூ.366 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
மேலும் அணு மின் நிலையத்தை சுற்றியுள்ள ஊர்களின் வளர்ச்சிக்கு என்று ரூ.165 கோடி அளிக்கப்பட்டுள்ளது. வணிக ரீதியான மின் உற்பத்தி சில வாரங்களில் துவங்கப்பட உள்ளது என்றார்.