ஜட்டிக்குள் வைத்துக் கடத்தல்... சென்னை விமான நிலையத்தில் 3 கிலோ தங்கம் சிக்கியது
சென்னை: துபாயில் இருந்து சென்னை வந்த விமானப் பயணியிடம் இருந்து சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 3 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
துபாயில் இருந்து நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு 'எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்' விமானம் சென்னை வந்தது. இந்த விமானத்தில் கேரளாவைச் சேர்ந்த அஷ்ரப் (29) என்ற பயணியும் வந்தார். சந்தேகத்தின் பேரில் அவரது கைப்பையை சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது அவரின் கைப்பையில் இருந்து ஒரு கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப் பட்டன. அதனைத் தொடர்ந்து அவரது ஆடைகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அவர் உள்ளாடைகளில் இரண்டு கிலோ தங்கக் கட்டிகளை மறைத்து கடத்தி வந்தது கண்டு பிடிக்கப் பட்டது.
மொத்தமாக அவரிடம் இருந்து 3 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப் பட்டன. அவற்றின் மதிப்பு ஒரு கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது.
பிடிபட்ட அஷ்ரப் சர்வதேச கடத்தல் கும்பலிடம் வேலை செய்பவர் எனக் கூறப்படுகிறது. ஒரு கிலோ தங்கத்திற்கு 5,000 ரூபாய் என மூன்று கிலோ தங்கத்திற்கு 15 ஆயிரம் ரூபாய் கூலி பேசி தங்கம் கடத்தலில் ஈடுபட்டதாக சுங்கத்துறை அதிகாரிகளின் விசாரணையில் தெரிய வந்துள்ளது..