விருதுநகர்: மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி பாலியல் பலாத்காரம் - 4 பேர் கைது
விருதுநகர்: விருதுநகர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குல்லூர் சந்தையை அடுத்த அரச குடும்பன்பட்டியை சேர்ந்த 13 வயது சிறுமி 7ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்தாள். மனநலம் பாதிக்கப்பட்டதால் தொடர்ந்து பள்ளிக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டிலிருந்த சிறுமியை சிலர் வெளியே அழைத்துச் சென்றதாக பெற்றோருக்கு தெரிய வந்தது. இது பற்றி அவர்கள் விருதுநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
போலீசார் விசாரணை நடத்தியதில் அதே கிராமத்தை சேர்ந்த பால்ராஜ் பாண்டி,19, புல்லட் என்ற பாண்டி,21, திருக்குமரன் மற்றும் 2 மாணவர்கள் சிறுமியை தங்கள் வீட்டிற்கும், காட்டு பகுதிக்கும் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.
இந்த சம்பவம் பற்றி பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து பால்ராஜ் பாண்டி, புல்லட் என்ற பாண்டி, மற்றும் 2 மாணவர்களை கைது செய்தனர். தலைமறைவான திருக்குமரனை போலீசார் தேடி வருகின்றனர்.