நீரில் மூழ்கி 4 சிறுமிகள் பரிதாபம மரணம்..கரூர் அருகே...!
கரூர்: கரூர் அருகே பிறந்தநாள் விழாவை கொண்டாட சென்ற 4 பள்ளி மாணவிகள் அடுத்தடுத்து நீரில் மூழ்கி பலியானார்கள்.
கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியம், கழுகூர் ஊராட்சிக்குட்பட்ட மாரிபாறைப்பட்டி அருகே உள்ள பெருமாள் மலைக்கோவிலுக்கு பிறந்த நாள் விழாவை கொண்டாட அருகில் உள்ள ஆவுடையாப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 8 ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர் 9 பேர் சைக்கிளில் சென்றுள்ளனர்.
அங்கு அவர்கள் சாமி கும்பிட்டு விட்டு அனைவரும் உணவு அருந்தியுள்ளனர். அதன் பிறகு தண்ணீர் குடிப்பதற்காக அருகில் உள்ள சுனைக்கு சென்றுள்ளனர். அப்போது வழுக்குப்பாறையில் கால் வைத்த ஒரு மாணவி தவறி விழுந்து விட்டார். தவறி விழுந்த மாணவியை மீட்க அடுத்தடுத்து ஒவ்வொருவராக 9 பேரும் நீரில் குதித்துள்ளனர். இதில் 9 பேரும் மூழ்க ஆரம்பித்தனர்.
அவர்களின் கூக்குரல் கேட்டு அப்பகுதி பொதுமக்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் இறங்கினர். அதில், ஒரு மாணவன், 4 மாணவிகள் என 5 பேரை உயிருடன் மீட்டனர். மற்ற 4 பேரான சரோஜினி தேவி, சந்தியா, பாண்டிமீனா, வனிதா ஆகியோரை பிணமாக மீட்டனர்.
இச்சம்பவம் அறிந்த மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஜோஷி நிர்மல் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் அருணா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். உயிரிழந்த அக்குழந்தைகளின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்கள்.
4 மாணவிகளின் பிரேதங்களை உடற்கூறு பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்த நாளை கொண்டாட கோயிலுக்கு சென்ற பள்ளி மாணவிகள் அடுத்தடுத்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.