தை அமாவாசை: திருவண்ணாமலை குளத்தில் புனித நீராடிய 4 பேர் பலி
திருவண்ணாமலை: மஹோதய தை அமாவாசையை முன்னிட்டு திருவண்ணாமலை தீர்த்தகுளத்தில், புனித நீராடியபோது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி நால்வர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பொதுமக்கள் குளத்தில் நீராட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இன்று தை அமாவாசை, திருவோண நட்சத்திரம், சோமவரம் ஆகிய மூன்றும் சேர்ந்து வருவது சிறப்பு அம்சமாகும். இந்த விசேஷம் 30 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்வதால் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதிகாலை அண்ணாமலையார், உண்ணாமலையம்மன்னுக்கு மகா அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. பின்னர் தீர்த்தவாரி விழாவுக்காக சாமிகள் திட்டி வாயில் வழியாக கோவில் அருகே உள்ள அய்யங்குளத்துக்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது.
அண்ணாமலையார், உண்ணாமலையம்மன், பராசக்தி மற்றும் திருவண்ணாமலை பகுதியில் உள்ள கோவில்களில் இருந்து அங்காளம்மன், ரெட்டைக்காளியம்மன், காமாட்சியம்மன், பட்டையம்மன், வடவீதி முருகன் ஆகிய சாமிகள் தீர்த்தவாரிக்காக அய்யங்குளத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. சாமிகளுடன் சூலமும் கொண்டு வரப்பட்டிருந்தது. அதற்கு சிறப்பு அபிஷேகம் முடிந்ததும் தீர்த்தவாரி நடந்தது.
தீர்த்தவாரி விழாவை காண 10 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் குவிந்திருந்தனர். குளத்தை சுற்றி பக்தர்கள் திரண்டிருந்தனர்.
பல பக்தர்கள் குளத்தின் கரையில் முன்னோர்களுக்கான பித்ரு தர்ப்பணம் செய்து கொண்டு இருந்தனர். இன்னொரு பக்கம் குளத்தில் சாமி சிலைகளை கொண்டு குருக்கள் தீர்த்தவாரி நிகழ்ச்சியை நடத்திக்கொண்டு இருந்தனர்.
அவர்களை சுற்றி பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. அந்த பக்தர்கள் குருக்கள் நின்ற இடத்தை நெருங்கி வந்தனர். தீர்த்தவாரி நடந்த இடத்தை சுற்றி எந்த தடுப்பு வேலியும் அமைக்கப்படாததால் அங்கு கடுமையான நெரிசல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர்.
சாமி சிலைகளுடன் குளத்துக்குள் நின்ற குருக்கள் மீதும் பக்தர்கள் விழுந்தனர். இதனால் குருக்கள் உள்பட பலர் குளத்தில் மூழ்கினர். அவர்கள் உயிருக்கு போராடினர். சிலர் நீச்சல் தெரிந்ததால் நீந்தி வெளியே வந்துவிட்டனர். ஆனால் சாமி சிலையுடன் வந்த குருக்கள் புண்ணியகோட்டி, 50 குளத்தில் மூழ்கி இறந்தார். அவரது உடலை குளத்தில் இருந்து வெளியே கொண்டு வந்தனர்.
சாமி சிலையுடன் நின்ற மேலும் சில குருக்களை காணவில்லை என்று அங்கு நின்றவர்கள் கூறினர். உடனே பக்தர்களும், இந்து முன்னணி தலைவர் சங்கர் உள்ளிட்டவர்களும் குளத்துக்குள் இறங்கி தேடிப்பார்த்தனர். 1 மணி நேர தேடுதலுக்கு பின்னர் வெங்கட்ராமன்,30, சிவா, 30, , மணிகண்டன், 32, ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டன. இவர்களில் வெங்கட்ராமனும், மணிகண்டனும் சாஸ்திரிகள். மணிகண்டன் தனியார் கல்லூரி பேராசிரியராக பணியாற்றினார். இவரது நண்பர் சிவா.
திருவண்ணாமலை எஸ்.பி. பொன்னி மற்றும் போலீசாரும் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு வந்தனர். குளத்துக்குள் மேலும் சிலர் மூழ்கி இருக்கலாம் என்று அச்சம் நிலவுவதால் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. உயிர்பலி சம்பவத்தைத் தொடர்ந்து அய்யங்குளத்தில் பொதுமக்கள் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது.