யூடியூப்பில் ஆபாச வீடியோ அப்லோட் செய்த வாலிபருக்கு 4 வாரம் சிறை: சென்னை கோர்ட் தீர்ப்பு
சென்னை: யுடியூப்பில் ஆபாச படம் பதிவேற்றம் செய்த வாலிபருக்கு 4 வாரம் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
யுடியூப்பில் தமிழகத்தை சேர்ந்த மர்ம நபர் ஒருவர் ஆபாச படங்கள் பதிவேற்றம் செய்வதாக மத்திய புலனாய்வு பரிவு போலீசாருக்கு அமெரிக்க தூதரக அதிகாரிகள் கடந்த 2012ம் ஆண்டில் ஒரு தகவலை அளித்தனர். இதையடுத்து தமிழ்நாடு கணினி வழி குற்றப்பிரிவு போலீசார், இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், யுடியூப்பில் ஆபாச படம் பதிவேற்றம் செய்தது, விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த வேணுகோபால் என்பவரின் மகன் அருண்பாபு (24) என்பது தெரியவந்தது. அவர் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து அருண்பாபு மீது சிபிசிஐடி போலீசார் சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்ரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அருண்பாபுக்கு 4 வாரம் சிறைதண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.