கொடுங்கையூர் பேக்கரி தீவிபத்து... 4 பேர் கவலைக்கிடம்... அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
சென்னை: கொடுங்கையூர் பேக்கரி தீவிபத்தில் சிக்கிய 4 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
கொடுங்கையூரில் உள்ள பேக்கரியில் நேற்று முன்தினம் இரவு திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது. இந்தத் தீ விபத்தில் தீயணைப்பு வீரர் ஏகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தை வேடிக்கை பார்த்து செல்ஃபி எடுக்க அலைமோதிய போதும் சிலிண்டர் வெடித்து சிதறியதால் 47 பேர் படுகாயமடைந்தனர்.
படுகாயம் அடைந்தவர்கள் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளனர். இவர்களை நேரில் சென்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆறுதல் கூறினார்.
இந்நிலையில் விபத்து குறித்து விஜயபாஸ்கர் கூறுகையில், விபத்தில் காயமடைந்த 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. காயமடைந்தவர்களுக்கு விரைந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 20 பேரும், ஸ்டான்லி மருத்துவமனையில் 10 பேரும், அப்பல்லோ உள்ளிட்ட தனியார் மருத்துவமனையில் 10 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.