திருச்சியில் பன்றிக் காய்ச்சலுக்கு 4 வயது சிறுவன் பலி... மக்களிடையே அதிகரிக்கும் பீதி
திருச்சியில் பன்றிக்காய்ச்சல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 4 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி அரியமங்கலம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் ஜீவானந்தம் அருகிலுள்ள பள்ளியில் எல்கேஜி படித்து வந்தார். சில நாட்களுக்கு முன் சிறுவன் ஜீவானந்தத்துக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பரிசோதனையில் ஜீவானந்தத்துக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் அங்கிருந்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை குழந்தை ஜீவானந்தம் உயிர் பிரிந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அண்ணாநகர், திடீர் நகர் பகுதிகளில் கழிவுநீர் கால்வாய்கள் முறையாக சுத்தம் செய்யப்படாததால் தொற்றுநோய் பரவுவதாகவும் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தொடர்ந்து பன்றிக் காய்ச்சலுக்கு பலர் பலியாகி வருவதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். சளி, காய்ச்ச்ல் போன்ற தொந்தரவு தொடர்ந்து இருக்குமானால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லும்படி அரசு சார்ப்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. என்றாலும், காய்ச்சல் பரவுவதை அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.