தகாத உறவை கண்டித்ததால் 4 வயது சிறுவனை கழுத்தை அறுத்த கொன்ற பெண்!
கடலூர்: திட்டக்குடி அருகே 4 வயது சிறுவன் பிளேடால் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில், பக்கத்து வீட்டு பெண்ணை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் நித்திஷ். கடந்த 23ம் தேதி வீட்டின் பின்புறம் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தான். இதையடுத்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக வழக்கும் பதிவு செய்தனர். இந்த வழக்கில் தனிப்படை அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணையில், நித்திஷின் பக்கத்து வீட்டில் வசிக்கும் பரமேஸ்வரி என்ற பெண்மணி, வேறு ஒரு ஆணுடன் தகாத உறவு வைத்துக் கொண்டதை, நித்திஷின் தந்தை கண்டித்ததாகவும், இதுகுறித்து கிராம மக்களிடம் கூறியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பரமேஸ்வரி, முருகேசனை பழிவாங்க சிறுவன் நித்திஷை கொலை செய்தது தெரியவந்தது. காவல்துறையிடம் பிடிபட்டு விடுவோம் என்ற பயத்தில் பரமேஸ்வரி தற்கொலைக்கு முயன்றதை வைத்து இவ்வழக்கில் துப்பு துலங்கியதாக போலீசார் தெரிவித்தனர்.