இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்... 86 தமிழக, புதுவை மீனவர்களை சிறை பிடித்தது
காரைக்கால் : தமிழகம் மற்றும் புதுவை மாநிலம் காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள் 86 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றுள்ளனர்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து செல்லும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில், நேற்று வழக்கம் போல் கடலுக்குச் சென்ற காரைக்கால் மற்றும் நாகை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, இலங்கை மீனவர்களும் அதே பகுதியில் மீன் பிடித்திருக்கின்றனர்.
இதனால், மீன் பிடிப்பதில் இருதரப்பினருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் இலங்கை மீனவர் ஒருவர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இலங்கை மீனவர்கள் அந்நாட்டு கடற்படையிடம் புகார் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, சம்பவப் பகுதிக்கு விரைந்து வந்த இலங்கை கடற்படையினர் 43 மீனவர்களையும், அவரகளது 6 படகுகளுடன் சிறைபிடித்துச் சென்றதாக நேற்று தகவல் வெளியானது.
ஆனால் முல்லைத் தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 86 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களின் 10 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை கடற்படை செய்தி தொடர்பாளரான இண்டிகா சில்வா இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், மீனவர்கள் அனைவரும் திரிகோணமலை போலீசாரிடமும் ஒப்படைக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே மார்ச் 5-ம் தேதி நடக்க இருந்த இலங்கை-இந்தியா இடையிலான மீனவர்கள் பேச்சுவார்த்தை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இலங்கையில் புதிய அதிபராக சிறிசேனா பதிவியேற்றதற்கு பின்னர் நடக்கும் முதல் தமிழக மீனவர்கள் கைது சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
சிறைப்பிடிக்கப்பட்டவர்களில் காரைக்காலை சேர்ந்த மீனவர்கள் யார், நாகப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் யார் என்ற விவரம் தெரியவில்லை. இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மூலம் தகவல் வந்தால்தான் மற்ற விவரங்கள் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால், காரைக்கால் மற்றும் நாகப்பட்டினத்தில் உள்ள மீனவர் கிராமங்களில் குழப்பம் நிலவுகிறது. ஒவ்வொரு குடும்பத்தினரும் மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற தங்கள் படகுதான் சிறைப்பிடிக்கப்பட்டிருக்குமோ என்று கவலையில் ஆழ்ந்துள்ளனர்.