புதுவாழ்க்கை... உள்நாட்டுப் போரால் தமிழகத்தில் தஞ்சம் அடைந்த 46 அகதிகள் இலங்கைக்கு திரும்பினர்
இலங்கை உள்நாட்டுப் போர் காரணமாக தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்திருந்த 46 பேர் இன்று இலங்கை திரும்பியுள்ளனர்.
சென்னை: அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையகத்தினால் இலங்கைத் தமிழ் அகதிகள் 46 பேர், தமிழகத்தில் இருந்து இன்று காலை விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
1990ஆம் ஆண்டு, இலங்கையில் ஏற்பட்ட போரின் காரணமாக தமிழ் நாட்டில் தமிழ் அகதிகள் தஞ்சமடைந்தனர். அவர்கள் அனைவரும் தமிழகத்தில் உள்ள முகாம்களில் வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், இலங்கையில் போர் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு ஒரு அமைதி சூழல் திரும்புவதால், பல்வேறு நாடுகளில் வாழ்ந்த அகதிகள் தாய் நாடு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். கண்டி, கொழும்பு, முல்லைத்தீவு, திருகோணமலை, கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் இருந்து தமிழகம் வந்து முகாம்களில் வசித்து வந்த 46 பேர் இன்று இலங்கை திரும்பியுள்ளனர்.
தமிழகத்திலுள்ள முகாம்களிலும், தனியார் வீடுகளிலும் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் இலங்கைக்கு மீள்குடியேற்றுவதற்கு அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையகத்தின் ஆதரவுடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. என்றாலும், மிகவும் குறைந்த அளவிலான அகதிகளே மீண்டும் இலங்கைக்கு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.