போராட்டத்தில் பங்கேற்றவர் உயிரிழக்கவில்லை… வதந்திகளை நம்ப வேண்டாம்.. போராட்டக்காரர்கள் வேண்டுகோள்
ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் வேண்டும் என்று கோரி மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்து வரும் போராட்டத்தில் சந்திரமோகன் என்பவர் உயிரிழக்க வில்லை. வதந்திகளை நம்ப வேண்டாம் என்று போராட்டக்காரர்கள் வேண்டுகோ
மதுரை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் போராட்டத்தில் ஒருவர் இன்று மயங்கி விழுந்து மரணம் அடைந்தார் என்ற செய்தி வெளியானது. தமுக்கம் மைதானத்தில் அப்படி யாரும் உயிரிழக்கவில்லை என்று போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு வேண்டும் என்று மதுரை தமுக்கம் மைதானத்தில் தொடங்கிய போராட்டம் தொடர்ந்து 5 நாட்களாக இரவு பகல் பாராமல் மாணவர்கள் மற்றும் இளைஞர்களால் நடத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசு அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்த போதிலும், அதனையும் ஏற்காமல் நிரந்தரத் தீர்வு வேண்டும் என்று கூறி தமுக்கம் மைதானத்தில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதற்கு மக்களிடையே பெரிய அளவில் ஆதரவு குவிந்து வருகிறது. இதனால் அக்கம் பக்கம் இருப்பவர்கள் தமுக்கம் மைதானம் சென்று தங்களுடைய ஆதரவைத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தின் போது 48 வயதான சந்திரமோகன் என்பவர் உயிரிழந்தார் என்ற செய்தி வெளியானது.
இதற்கு போராட்டக்காரர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். போராட்டத்தில் பங்கேற்ற யாரும் இறக்கவில்லை என்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் போராட்டக்காரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.