பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ5 கோடி.. தனியார் வங்கிகளுக்கு ரூ6,000 கோடியா? சீறும் வங்கி அதிகாரிகள்
பொதுத்துறை வங்கிகளுக்கு வெறும் 5 கோடி ரூபாய்க்கு புதிய நோட்டுக்களை கொடுத்துவிட்டு தனியார் வங்கிகளுக்கு அதிக அளவில் ரிசர்வ் வங்கி பணம் கொடுத்துள்ளதாக வங்கி அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சென்னை: பொதுத் துறை வங்கிகளுக்கு 5 கோடி ரூபாய் அளவில் புதிய ரூபாயை கொடுத்துவிட்டு தனியார் வங்கிகளுக்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் புதிய நோட்டுக்களை ரிசர்வ் வங்கி கொடுத்து தனியார் மயத்தை ஊக்குவிப்பதாக வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்த பிறகு மக்கள் பழைய நோட்டுக்களை மாற்ற வங்கிகளுக்கு படை எடுத்து வருகின்றனர். அதே போன்று ஏடிஎம் மையங்களில் வாசல்களிலும் காத்துக்கிடக்கின்றனர். ஆனால், பல வங்கிகளில் பணம் இல்லாமல் நீண்ட வரிசையில் நின்ற பிறகு மக்கள் வெறும் கையோடு வீடு திரும்பினார்கள்.
அதே போன்று அரசு வங்கிகளின் ஏடிஎம்கள் திறக்கப்படாமலேயே இருந்தன. திறந்திருந்தாலும் அங்கு பணமே கிடைக்கவில்லை. ஆனால் தனியார் வங்கிகளின் ஏடிஎம்களில் மட்டுமே பணம் கிடைத்து வந்தது. இதற்கு காரணம் ரிசர்வ் வங்கிதான் என்று வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
பொதுத்துறை வங்கிகளுக்கு 5 கோடிக்கு புதிய நோட்டுக்கள்
நெல்லை, குமரி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு வெறும் 5 கோடி ரூபாய் மதிப்பில் புதிய ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது. இந்தப் பணத்தை வைத்துக் கொண்டு எப்படி பொதுமக்களின் பணத்தட்டுப்பாட்டை போக்க முடியும் என்று வங்கி அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தனியார் வங்கிகளுக்கு 6 ஆயிரம் கோடி
தனியார் துறை வங்கிகளுக்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் புதிய ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது. இதனால், தனியார் வங்கிகளுக்கு சென்றால் பணத்தை எளிதாக மாற்றி விடலாம் என்ற நிலையை செயற்கையாக ரிசர்வ் வங்கி உருவாக்க நினைக்கிறது. இதன் மூலம் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் சதி வேலையை ரிசர்வ் வங்கி செய்துள்ளது.
மூடப்பட்டே கிடந்த அரசு வங்கி ஏடிஎம்கள்
ரிசர்வ் வங்கியின் இதுபோன்ற செயலால், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி உள்ளிட்ட அனைத்து பொதுத் துறை வங்கிகளின் ஏடிஎம் மையங்களும் பணம் இல்லாமல் மூடப்பட்டே கிடந்தன. அதே வேளையில், பஞ்சாப் நேஷனல் வங்கி, ஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கி, ஐசிஐசிஐ உள்ளிட்ட தனியார் துறை வங்கிகளின் ஏடிஎம் மையங்கள் நன்றாக செயல்பட்டு வந்தன. இந்தியன் வங்கியை திட்டிக் கொண்டே தனியார் வங்கிகளின் ஏடிஎம்களில் பணத்தை எடுத்துச் சென்ற மக்களை பார்க்க முடிந்தது.
மத்திய அரசின் சதி
இதன் மூலம், இவ்வளவு நெருக்கடியான சூழ்நிலையிலும் தனியார் வங்கிகள் நன்றாக செயல்படுவதாக காட்டி பொதுத்துறை வங்கிகளுக்கு எதிராக மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் செயல்படுவதாக வங்கி அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
வங்கி அதிகாரிகள் கோரிக்கை
அக். 1ம் முதல் எவ்வளவு ரூபாய் எந்தெந்த வங்கிகளுக்கு புதிய ரூபாய் நோட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளது. அதில் எவ்வளவு தனியார் வங்கிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. எவ்வளவு பொதுத் துறை வங்கிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்பதை ரிசர்வ் வங்கி பகிரங்கமாக வெளியிட வேண்டும்.
அக்.1 ம் முதல் வங்கிகளில் எவ்வளவு பணப்புழக்கம் இருந்தது. எவ்வளவு பணப்புழக்கம் வெளியில் இருந்தது என்பதை ரிசர்வ் வங்கி அறிவிக்க வேண்டும். அடுத்த 3 மாதத்திற்கு வங்கிகள் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை ரிசர்வ் வங்கி தெளிவாக அறிவிக்க வேண்டும். மேலும், பொதுத்துறை வங்கிகளுக்கு போதிய அளவு புதிய நோட்டுக்களை வழங்க வேண்டும் என்று வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு கோரியுள்ளது.