கடலில் குளிக்கப் போன 5 பெண்கள் நீரில் மூழ்கி பலி.. சாயல்குடியில் துயரம்!
சாயல்குடி, ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே கடலில் குளிக்கப் போன 5 பெண்கள் கடல் அலையில் சிக்கி பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 5 பேருக்கும் நீச்சல் தெரியாது என்பதால் உயிரிழந்துள்ளனர்.
சாயல்குடி அருகே தெற்குநரிப்பையூரை சேர்ந்த முகமது ரபீக் என்பவரின் மனைவி ஜீமத் பசரியா (40). இவர்களது மகள் இஸ்மத் (18). இவர்களின் உறவினர்களான, இதே பகுதியைச் சேர்ந்த சீனி அபுல் மனைவி செய்யது காதர் பீவி (45), இவரது மகள் அராபத் (20), சீனி அபுலின் சகோதரர் முஸ்தாக் மனைவி ரமீலா (23). இவர்கள் 5 பேரும் நேற்று மதியம் குழந்தைகளுடன் நரிப்பையூர் அருகே ஐந்து ஏக்கர் கடல்பகுதியில் உள்ள காதர் சாகிப் தர்காவிற்கு சென்றனர்.
இந்தப் பகுதி கடற்பாசிகள் நிறைந்த அழகான பகுதியாகும். அடிக்கடி சினிமா படப்பிடிப்பும் இங்கு நடக்குமாம். இதனால் இங்குள்ள கடற்பகுதியைச் சுற்றிப் பார்க்க பலரும் வருவர். பிற்பகல் 2.45 மணியளவில் காதர் சாகிப் தர்காவில் பிரார்த்தனை நடந்து முடிந்ததும், ஐந்து பெண்களும் குழந்தைகளுடன் கடலில் குளிக்கச் சென்றுள்ளனர். குழந்தைகளை கரையில் விட்டு விட்டு பெண்கள் மட்டும் குளித்துள்ளனர். அப்போது திடீரென ஐந்து பேரும் அலையில் சிக்கி நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு நீச்சல் தெரியாது. இதனால் நீரில் மூழ்கி விட்டனர்.
இதைப் பார்த்து கரையில் இருந்த குழந்தைகள் அலறியுள்ளனர். அதைப் பார்த்து அங்கிருந்த மீனவர்கள் ஓடி வந்து பெண்களைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால், பசரியா, இஸ்மத், காதர் பீவி, அராபத், ரமீலா ஆகிய 5 பெண்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். ஐவரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கடலாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
மீட்பில் ஈடுபட்ட மீனவர் ஒருவர் கூறுகையில், குழந்தைகளின் அலறல் கேட்டு ஓடிவந்தோம். அப்போது 5 பெண்களும் கடல் நீரில் தத்தளித்து கொண்டிருந்தனர். 4 பேரை உயிரிழந்த நிலையில்தான் மீட்டோம். ஒருவருக்கு மட்டும் உயிர் இருந்தது. அவரும் சிறிது நேரத்தில் இறந்துவிட்டார் என்றார்.