புதுக்கோட்டையில் பள்ளி வாகனம் மோதி 5 வயதுக் குழந்தை பரிதாப பலி
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில், 5 வயதான பள்ளிக் குழந்தை ஒன்றின் மீது பள்ளி வாகனம் மோதியதில் அக்குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை, ஆராங்கல் பகுதியைச் சேர்ந்தவர் காவ்யா (5). இவர் அங்குள்ள கற்பக விநாயகா பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார்.
இன்று காலை காவ்யாவையும், அவரது தம்பியையும் இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு அவரது தாயார் பள்ளி வாகனத்தில் ஏற்றி விடுவதற்கு வந்துள்ளார். நேரமாகி விட்டதால் வேகமாக வந்துள்ளார்.
அப்போது, சாலையைக் கடக்க முயற்சித்த போது பின்னால் வந்த மற்றொரு பள்ளி வாகனம் இரு சக்கர வாகனம் மேல் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட காவ்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய தாயாரும், தம்பியும் சிறு காயங்களுடன் தப்பினர்.
காவ்யாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. காவ்யா விபத்தில் உயிரிழந்த தகவல் பரவியதும் ஆராங்கல் பகுதியைச் சேர்ந்தவர்கள் பெரும் திரளாக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் குவிந்து விட்டனர். அனைவரும், காவ்யா மிகவும் புத்திசாலியான குழந்தை என்று சோகத்துடன் கூறினர்.