50 பேருக்கு காய்ச்சலால் வேளாண் கல்லூரிக்கு விடுமுறை அறிவிப்பு!
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வேளாண் ஆராய்ச்சிக் கல்லூரியில் படிக்கும 50 மாணவர்களுக்கு வைரஸ் காய்ச்ச்சல் பாதிக்கப்பட்டதால் விடுதிக்கு விடுமறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி : கல்லூரி மாணவர்கள் 50 பேருக்கு அடுத்தடுத்து வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டதால் கிள்ளிகுளம் வேளாண் கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை தடுக்க சுகாதார துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் எதிரொலியாக நெல்லை-தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. ஆங்காங்கே கொசு ஒழிப்பு, நிலவேம்பு கசாயம் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு மலையடிவாரத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் விடுதியில் தங்கி படிக்கும் 50 மாணவ-மாணவிகள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு மாணவருக்கு டெங்கு அறிகுறி காணப்பட்டதால் அவர் நெல்லையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதையடுத்து மேலும் பலர் பாதிக்கப்படாமல் இருக்க கல்லூரிக்கு வருகிற 16-ந்தேதி வரை விடுமுறை அளித்து கல்லூரி முதல்வர் ராமலிங்கம் அறிவித்துள்ளார். விடுமுறை அளிக்கப்பட்டதை தொடர்ந்து வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் சொந்த ஊர் புறப்பட்டு சென்றனர்.