சென்னைவாசிகளே இன்னும் 500 மி.மீ மழை பெய்யுமாம்! எச்சரிக்கும் பிபிசி வானிலை மையம்
சென்னை: சென்னையில் ஏற்கனவே 1140 மி.மீ மழை பெய்து சென்னைவாசிகளை மிதக்கவிட்டுள்ள நிலையில் மேலும் 500 மி.மீ மழை பாக்கியிருக்கிறது என்றும் , இன்றும் நாளையும் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் மழை கொட்டப்போகிறது என்றும் பிபிசி வானிலைமையம் எச்சரித்துள்ளது.
நம்ம ஊர் மழையை கணித்துச்சொல்ல ரமணன் இருக்கும் போது பிபிசி வானிலை மையம் வேறு பீதியை கிளப்புகிறது என்று கவலையில் ஆழ்ந்துள்ளனர் சென்னைவாசிகள்.
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக ஞாயிறு இரவு முதல் மீண்டும் மழை தொடங்கியுள்ளது. நேற்று பிற்பகல் முதல் விட்டுவிட்டு பெய்து வந்த மழை, இரவிலும் நீடித்தது. இதனால் நேற்று மாலையில் அலுவலகம் முடிந்து வீடு திரும்பியவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
போக்குவரத்து நெரிசல்
இன்று அதிகாலை முதல் சென்னையில் அனைத்து பகுதியிலும் காற்றுடன் பலத்த மழை கொட்டி வருவதால் பல இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் கிண்டி, வடபழனி, சைதாப்பேட்டை, அடையாறு, திருவான்மியூர், மயிலாப்பூர், பட்டினம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.
புறநகரில் வெள்ளம்
பல இடங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று நிலை தான் புறநகர் பகுதிகளான தாம்பரம், செங்குன்றம், குழல், குளத்தூர், மாதவரம், ராஜமங்கலம், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை காணப்படுகிறது. ஏற்கனவே கொட்டி மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சென்னை வாசிகள், மீண்டும் கொட்டி வரும் மழையால் கவலை அடைந்துள்ளனர்.
பனைமரத்தால் பாதிப்பு
செங்குன்றத்தில் நேற்று கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
மாதவரம் பால்பண்ணை அருகே தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த பணை மரம் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்ததால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரத்தை வெட்டி அறுத்து எடுத்த பின்னர் போக்குவரத்து சீரானது.
|
500 மி.மீ மழை
சென்னையில் வடகிழக்கு பருவமழை கூடுதலாகவே பெய்துள்ளது. இந்த ஆண்டு ஒரே மாதத்தில் 114 செ.மீ மழை அதாவது 1140 மி.மீ பெய்துள்ளது. இந்த நிலையில் பிபிசி வானிலை ஆய்வு மையம், சென்னையிலும் சுற்றுப்புற பகுதிகளிலும் இன்னும் இரு தினங்களில் 500 மி.மீ அளவிற்கு மழை கொட்டும் என்றும் இதனால் மீண்டும் சென்னையும், புறநகரும் வெள்ளக்காடாக மாறும் என்றும் எச்சரித்துள்ளது.
சென்னைவாசிகளே... உஷாரா இருங்க... முடிஞ்சா ஆபிஸ்க்கு லீவு போட்டுட்டு வீட்லயே முடங்கியிருங்க ப்ளீஸ்!.