அதிகரிக்கும் மனஅழுத்தம்... மரணத்தை தழுவும் தமிழக காவல்துறையினர்!
சென்னை: சென்னையில் குழந்தையில்லை என்ற காரணத்திற்காக இளம் பெண் போலீஸ்காரர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை குமரன் நகர் குற்றப்பிரிவு போலீசில் பெண் போலீஸ்காரராக பணியாற்றியவர் புவனேஸ்வரி (வயது 26). சென்னை ஆயிரம் விளக்கு போலீஸ் குடியிருப்பில் வசித்தார். இவருக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. கணவர் பெயர் சேகர். அவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இவர்களுக்கு குழந்தை இல்லை.
நேற்று இரவு 8.30 மணி அளவில், வீட்டில் தனியாக இருந்த புவனேஸ்வரி, திடீரென்று உடலில் மண்எண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளித்து விட்டார். சற்று நேரத்தில் வீட்டுக்குள்ளேயே உடல் கருகி இறந்து விட்டார்.
இவர் மட்டுமல்ல இந்தியாவில் காவலர் தற்கொலை எண்ணிக்கையில் முதல் இடம் வகிக்கிறது தமிழகம். கடந்த 2012ம் ஆண்டு மட்டும் தமிழ்நாட்டில் 58 காவலர்கள் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கிறது புள்ளிவிபரம்.
250 மரணங்கள்
இந்திய அளவில் காவல்துறையில் நிகழும் தற்கொலைகள், மரணங்கள் குறித்து தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தகவல் வெளியிட்டுள் ளது. அதன்படி 2012ல் தமிழகத்தில் மட்டும் 280 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 58 தற்கொலைகள். இந்த எண்ணிக்கை 2011 -ஆம் ஆண்டைவிட 50% அதிகம்.
இந்தியா முழுவதும்
நாடுமுழுவதும் 821 காவலர்கள் பணியின்போதே உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கிறது தேசிய குற்றப்பிரிவு ஆவண காப்பகத்தின் புள்ளிவிபரம். தமிழகத்தில் பணியின் போது தாக்குதல்களுக்கு உள்ளாகி இறப்பவர்களை விட தற்கொலை செய்துகொள்ளும் காவலர்களின் எண்ணிக்கை அதிகம்.
மகாராஷ்டிராவில்
மகாராஷ்டிராவில் 28 காவலர்களும், கர்நாடகாவில் 17 பேரும், மத்திய பிரதேசத்தில் 12 பேரும், ஆந்திரா, ஹரியானா, டெல்லியில் தலா 10 பேரும் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கிறது புள்ளிவிபரம்.
அற்ப ஆயுளுக்கு காரணம்?
இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 67 வயது எனும் நிலையில் தமிழகக் காவலர்களின் இந்த அற்பாயுளுக்கு காரணம் என்ன?
24 மணிநேரமும் ‘காவலர்'களாக மட்டுமே வாழும் பணிச் சூழல்தான் காவலர்களின் முதல் எதிரி. குடும்பத்துடன் நேரம் செலவிடுதல், நண்பர்களுடன் இணைந்திருத்தல், பொழுதுபோக்கு, சமூகக் கலப்பு என சராசரி குடிமக்கள் அனுபவிக்கும் உரிமைகள் காவலர்களுக்கு மறுக்கப் படுகிறது.
மனஅழுத்தம் அதிகம்
பெரும்பாலான காவலர்கள் படபடப்பு, புலம்பல், சந்தேகம், குழப்பம், தெளிவின்மை என எதிர்மறை உணர்ச்சிகளில் அவர்கள் உழல்கின்றனர். முக்கியமாக குடும்பத்துடன் நேரம் செலவிடவும் அன்பு செலுத்தவும் பணிச்சூழல் இடமளிக்க வில்லை. இதனால், ஏற்படும் மன அழுத்தம் தற்கொலைக்கும் இளவயது மரணங்களுக்கும் காரணமாகிறது என்கின்றனர் மனநல நிபுணர்கள்.
நெருக்கடிகள் அதிகம்
தற்கொலை செய்துகொள்ளும் காவலர் களில் பெரும்பாலானவர்கள் ஆண்கள். ஆண் காவலர்களை போலவே பெண் காவலர்களும் உடல், மன பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். ஆனால், அந்தப் பாதிப்புகள் அவர்களை தற்கொலை வரை இட்டுச் செல்வது மிகவும் அரிது. "மன உளைச்சலுக்கு ஆளாவதில் ஆண்களை விட, பெண் காவலர்களின் எண்ணிக்கை அதிகம். ஆனாலும் பெண்கள் அவற்றை எளிதில் கடந்து விடுகின்றனர். ஒருசிலர்தான் தற்கொலை வரை செல்கின்றனர்.
பணிச்சுமை அதிகம்
மார்ச் 31, 2013 நிலவரப்படி தமிழக காவல் துறையில் பணியாற்றும் பெண் காவலர்களின் எண்ணிக்கை 10,118. இது, மொத்த காவலர் களின் எண்ணிக்கையில் 10.57 % ஆகும். இதில் 7 % உயரதிகாரிகள். மீதமுள்ள 93 % கீழ்நிலைக் காவலர்களே அதிகப் பணிச் சுமைக்கு ஆளாகின்றனர்.
உடல்ரீதியான பிரச்சினை
அவசர காலங்களில் பல நாட்கள்கூட, குடும்பத்தைப் பிரிந்திருக்க வேண்டியிருக்கும். திருமணமானோர் வீடு, குழந்தைகளை கவனிக்கும் குடும்பத் தலைவி யாகவும் இருக்க வேண்டியுள்ளது. இது அவர்களுக்கு மன அழுத்தத்தை அதிகரிக்கிறது. மேலும் உடல்ரீதியான பிரச்னைகள் வாட்டும் நேரத்தில் விடுப்பு எடுக்க முடியாது. இரவு நேரப்பணி போன்றவையும் இவர்களை சோர்வடையச் செய்கிறது" என்றும் கூறுகின்றனர் நிபுணர்கள்.
பொழுதுபோக்கு
குடும்பத்துடன் நேரம் செலவழிக்காததால் எந்த பிடிப்பும் இல்லாத நிலைக்கு காவலர்கள் தள்ளப்படுகின்றனர். இசை கேட்பது, புத்தகம் படிப்பது, திரைப்படம் பார்ப்பது என மனதை புத்துணர்வு பெறச் செய்யும் பொழுதுபோக்கு களுக்கு நேரமில்லை.
பகல் குடிகாரர்களாக…
திருட்டு, கொலை போன்ற குற்றச் செயல்களில் குற்றவாளிகளை உடனே பிடிக்க உயரதிகாரிகளால் கொடுக்கப்படும் அழுத்தம் பெரிய நெருக்கடியாக கடைநிலை காவலர்க ளுக்கு மாறுகிறது. அதிலிருந்து தப்பிக்க பலரும் மதுவை நாடுகிறார்கள். காவலர்களில் பலர் பகல் குடிகாரர்களாக மாறுகின்றனர் என்கிறார் காவல்துறை உயரதிகாரி ஒருவர்.
நோய் பாதிப்பு அதிகம்
வேலைக்காகச் செல்லும் இடத்தில், கிடைத்ததை எந்த நேரத்திலும் சாப்பிட வேண்டிவரும். உடல் மீது அக்கறை செலுத்த முடியாது. முறையற்ற உணவுப் பழக்கம் நோய்களுக்கு வித்திடுகிறது. தவறான வாழ்க்கை முறையால் வரும் சர்க்கரை மற்றும் உயர் ரத்த அழுத்தப் பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். முறையான உடற்பயிற்சி செய்ய முடியாது. நேரத்திற்கு தூங்க முடியாது. அதிக நேரம் நின்று வேலை செய்வதால், எலும்பு தொடர்பான நோய்கள் தாக்குகின்றன. மது மற்றும் இதர போதைப் பழக்கங்களால் கல்லீரல் நோய்களும் அதிகம் பாதிக்கிறது.
உணர்ச்சியற்றவர்கள்
ஒரு சாதாரண மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் பார்க்காத அவலங்களை ஒரு காவலர் ஒரே நாளில் பார்க்கி றார். மரணம், அழிவு, மனித அவலம், எதிர்மறை உறவுகள், பயங்கர விபத்துகள், விவரிக்க முடியாத குற்றங்கள் என மோசமானவற்றைப் பார்த்துப் பார்த்து உணர்ச்சியற்றவர்களாக மாறுகின்றனர்.
மனம் மாறும் காவலர்கள்
குடும்பத்திடமிருந்து துண்டிக்கப்பட்டே இருப்பதால் பெரும்பாலும் சக காவலர் மீதோ வெளிநபர்கள் மீதோ ஈடுபாடு கொண்டு திருமணத்தை மீறிய உறவாக அது வளர்கிறது. நாளடைவில் இது கடுமையான மனப் பிரச்னை களை உண்டாக்கிறது.
அமைப்பு இல்லை
‘‘காவலர்களுக்கு தங்கள் உரிமைகளைக் கேட்க அமைப்பு கிடையாது. எனவேதான் எல்லா கோபங்களையும் மக்களிடம் காட்டுகின்றனர். நாட்டின் சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு என மக்களை நேரடியாகச் சந்திக்கும் துறை இது. காவலர்களின் பிரச்னையை மேலோட்டமாகப் பார்க்காமல், அவர்களின் தேவைகள் என்ன, அவற்றை நிறைவேற்றுவது எப்படி என ஆக்கப் பூர்வமாக செயல்பட வேண்டியது அரசின் கடமை. யானைகளுக்கு புத்துணர்வூட்ட ஆண்டுதோறும் புத்துணர்வு முகாம்கள் நடத்தும் தமிழக அரசு, காவல்துறையினரின் மனநலத்தைக் காக்க கூடுதலாக அக்கறை செலுத்த வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.