அடப்பாவமே! ஒன்றா... இரண்டா 5 கோஷ்டிகளாக சிதறிப் போனது அதிமுக!
அதிமுகவில் தற்போது 28 எம்.எல்.ஏக்களுடன் 5-ஆவதாக ஒரு கோஷ்டி உதயமாகியுள்ளதால், இன்னும் எத்தனை கிளம்புமோ என்ற அதிர்ச்சியில் அக்கட்சி தொண்டர்கள் உறைந்துள்ளனர்.
சென்னை: அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ், தினகரன், திவாகரன் கோஷ்டிகளைத் தொடர்ந்து ஐந்தாவது கோஷ்டி ஒன்று உதயமாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் இன்னும் எத்தனை கோஷ்டிதான் முளைக்குமோ என்று அக்கட்சி தொண்டர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
எம்ஜிஆர் என்ற மக்கள் நாயகனால் தொடங்கப்பட்ட இயக்கம் என்பதால் பொதுமக்கள் மத்தியில் அதிமுகவுக்கு வரவேற்பு இருந்தது. அவரது காலத்துக்கு பிறகு அதிமுகவை கடந்த 30 ஆண்டுகளாக ஜெயலலிதா பாதுகாத்து வந்தார்.
ஜெயலலிதா மறைந்த பிறகு கட்சியை கைப்பற்ற சசிகலா நடத்திய கபட நாடகம் சக்ஸஸ் ஆனது. சசிகலாவே அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலேயே அமர்ந்தார். ஜெயலலிதா பயன்படுத்திய அனைத்தையும் பயன்படுத்தி டூப்ளிகேட்டாக உருவெடுத்தார்.
முதல்வர் நாற்காலிக்கு ஆசை
இவரது தலைமையை ஏற்க பிடிக்கவில்லையெனிலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கட்சியினர் இருந்தனர். இந்நிலையில் கொடுத்த பதவியை காப்பாற்றிக் கொண்டு காலத்தை ஓட்டாமல் முதல்வர் நாற்காலிக்கு ஆசைப்பட்டார்.
ஓபிஎஸ் கலகக் குரல்
முதல்வராக இருந்த ஓ. பன்னீர் செல்வத்துக்கு எதிராக தமது ஆதரவாளர்களை ஏவிவிட்டார். பின்னர் அவரை நிர்பந்தித்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவைத்தார். இதனால் பதவியை இழந்த பன்னீர் வெகுண்டு எழுந்தார்.
இரண்டாக உடைந்த அதிமுக
இதனால் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக பிளவுபட்டது. அத்துடன் தீபாவுக்கும் சில நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்தனர்.
கூவத்தூர் கூத்து
சசிகலாவுக்கு பதவி வெறி பிடித்ததால், எம்எல்ஏ-க்களை கூவத்தூரில் அடைத்து வைத்திருந்தார். ஆனால் சசிகலாவின் வெறியாட்டம் நிறைவேறாமல் சிறைக்குதான் செல்ல நேரிட்டது.
தினகரன் - எடப்பாடி கோஷ்டிகள்
பின்னர் எடப்பாடி தலைமையில் அரசு அமைந்தது. அதேநேரத்தில் அதிமுகவில் தினகரன் கோலோச்ச அவருக்கும் ஒரு கோஷ்டி உருவானது. தினகரனுக்கு போட்டியாக திவாகரன் 19 எம்.எல்.ஏக்களுடன் ஒரு கோஷ்டியை வளர்த்து வந்தார்.
இணைப்பு முயற்சி
இப்படி ஓபிஎஸ், எடப்பாடி, தினகரன், திவாகரன் என கோஷ்டிகளாக பிரிந்து கிடக்கிறது அதிமுக. தற்போது ஓபிஎஸ், எடப்பாடி, திவாகரன் கோஷ்டிகள் இணைவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் புதியதாக 'ஜாதி' அடிப்படையில் 28 எம்.எல்.ஏக்கள் கை கோர்த்து ஒரு புதிய கோஷ்டியாக விஸ்வரூபமெடுத்துள்ளனர். அதாவது அதிமுகவின் ஐந்தாவது கோஷ்டி உதயமாகியுள்ளது. தங்கள் சமூகத்துக்கு கூடுதல் அமைச்சரவை பிரதிநிதித்துவம் தேவை என்பது இந்த கோஷ்டியின் நிபந்தனை. இப்படி அதிமுக சிதறி சின்னாபின்னமாகி வருவது அக்கட்சி தொண்டர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.