தங்கையைக் கேலி செய்ததால் வந்த வினை.. புதிய தமிழகம் பிரமுகர் வெட்டிக் கொலை.. 6 பேர் கைது
திருச்சி: திருச்சியில், புதிய தமிழகம் கட்சி பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அண்ணன்- தம்பி உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருச்சி தென்னூர் அண்ணாநகர் புது மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவரும், புதிய தமிழகம் கட்சியின் தொண்டர் அணி அமைப்பாளராக இருந்தவருமான அண்ணாத்துரை (45) என்பவர் நேற்று முன்தினம் காலை திருச்சி பாலக்கரை பகுதி எடத்தெரு மெயின்ரோட்டில் ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
பந்தல் போடும் தொழிலாளியான அண்ணாத்துரை வரகனேரியில் பந்தல் போடுவதற்காக வந்து ஒரு கடையின் முன் சக தொழிலாளர்களுக்காக காத்திருந்த போது, ஆட்டோவில் வந்த கும்பல் அவரது சட்டையை பிடித்து இழுத்து சாலையில் கீழே தள்ளி வெட்டி கொன்றது.
பட்டப் பகலில் பயங்கர கொலை
பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏனென்றால் கொலை நடந்த இடம் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாகும். அண்ணாத்துரையை வெட்டி கொன்ற கொலையாளிகள் கண்ணிமைக்கும் நேரத்தில் தாங்கள் வந்த ஆட்டோவில் ஏறி தப்பி ஓடினார்கள். இதுதொடர்பாக திருச்சி காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். மாநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின்படி போலீஸ் துணை கமிஷனர் பிரபாகரன் மேற்பார்வையில் கோட்டை போலீஸ் உதவி கமிஷனர் சீனிவாச பெருமாள், காந்தி மார்க்கெட் இன்ஸ்பெக்டர் சிவகுமார், சப்-இன்ஸ்பெக்டர் சுரேந்தர் ஆகியோர் கொண்ட தனி போலீஸ் படை அமைக்கப்பட்டது.
பிரபாகரன் கொலையில் தொடர்புடையவர்கள்
தனிப்படை போலீசார் தீவிர புலன்விசாரணை நடத்தினார்கள். இதில் அண்ணாத்துரையை கொலை செய்தவர்கள் தென்னூர் அண்ணாநகர் புது மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள், அவர்களில் இருவர் கடந்த ஆண்டு நடந்த அண்ணாத்துரையின் மகன் பிரபு என்கிற பிரபாகரன் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் என தெரிய வந்தது. மகன் பிரபாகரன் கொலைக்கு பழிவாங்க அண்ணாத்துரை தங்களை கொன்று விடுவார் என பயந்து அவர்கள் சதி திட்டம் தீட்டி அவரை தீர்த்து கட்டியதும் விசாரணையில் தெரியவந்தது.
6 பேர் கைது
இதனை தொடர்ந்து திருச்சி- சென்னை பைபாஸ் சாலை பிச்சை நகரில் பதுங்கி இருந்த கொலையாளிகள் சேகர் மகன் ராஜா (28), இன்னொரு அண்ணாதுரை மகன்கள் பாண்டியராஜன் (22), ஜனார்த்தனன் (18), முருகன் மகன் புகழேந்தி (18), ஆறுமுகம் மகன் ரகு என்கிற ரகுராமன் (29) ஆகியோரைக் கைது செய்தனர். அனைவரும் அண்ணாநகர் புதுமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள். அதேபோல தென்னூர் சின்னசாமி நகரை சேர்ந்த கான் முகமது மகன் பீர் முகமது (23) இவரும் கைது செய்யப்பட்டார். 6 பேரும் நேற்று மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் பீர்முகமது ஆட்டோ டிரைவர் ஆவார். அண்ணாத்துரையை கொலை செய்ய பீர் முகமதுவின் ஆட்டோவில் தான் வந்து உள்ளனர். எனவே இந்த ஆட்டோவையும் போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.
முந்திக்கொண்டோம் கொலையாளிகள் பகீர் வாக்குமூலம்
இந்த கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள பிரபு உள்பட 2 பேரை தனிப்படை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். கொலையான அண்ணாதுரையின் மகன் பிரபாகரன் கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு திருச்சி கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் விரைவில் சாட்சிகள் விசாரணை தொடங்க இருக்கிறது.
தங்கையைக் கிண்டல் செய்ததால்
தில்லைநகர் போலீஸ் நிலையத்தின் ரவுடிகள் பட்டியலில் பெயர் இடம் பெற்று இருந்தவர் பிரபாகரன். இவர் பாண்டியராஜனின் தங்கையை கிண்டல் செய்ததால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைதாகி பின்னர் ஜாமீனில் விடுதலையான பாண்டியராஜன், அவரது நணபரான ராஜா ஆகியோர் ஊருக்குள் வரவில்லையாம். வெளியூரில் தங்கி இருந்து கொண்டு அண்ணா துரையின் நடவடிக்கைகளை கண்காணித்துக்கொண்டே இருந்திருக்கிறார்கள். இந்த நிலையில் தான் அண்ணாத்துரை கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.
அண்ணாதுரை சபதம்
அண்ணாதுரையை கொலை செய்தது ஏன் என்பது பற்றி பாண்டியராஜன், ராஜா ஆகியோர் போலீசாரிடம் பிரபாகரனை கொலை செய்தவர்களை (எங்களை) ஒரு வருடத்திற்குள் எப்படியும் கூலிப்படை மூலமாவது தீர்த்து கட்டிவிடுவேன் என அண்ணாதுரை சபதம் போட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. ஊருக்குள் வந்தால் அவர் எங்களை எப்படியும் கொன்று விடுவார் என பயந்தோம். எனவே நாங்கள் முந்திக்கொண்டு அவரை தீர்த்து கட்டி விட்டோம். இல்லை என்றால் அவர் எங்களை கொன்று இருப்பார் என பகீர் வாக்குமூலம் அளித்து உள்ளனர்.