திருமணமான பெண்ணிடம் செல்போன் மூலம் ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்தவர் அடித்துக்கொலை
திருப்பூர்: திருப்பூரை சேர்ந்த திருமணமான பெண்ணுக்கு செல்போன் மூலம் தொல்லை கொடுத்தவர் ஆறு பேரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்து உள்ள படர்ந்தபுளியை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளியான வேல்சாமி(46). அவர் ஒரு முறை தவறுதலாக தனது செல்போனில் இருந்து திருப்பூர் மாவட்டம் ராயபுரத்தை அடுத்து உள்ள பெத்திச்செட்டிபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கருப்பசாமியின்(33) மனைவி லலிதாவுக்கு போன் செய்துவிட்டார்.
இதையடுத்து அவர் அடிக்கடி லலிதாவுக்கு போன் செய்து பேசி தொல்லை கொடுத்ததுடன் ஆபாசமாகவும் பேசியுள்ளார். இது குறித்து லலிதா தனது கணவரிடம் தெரிவிக்க அவர் வேல்சாமிக்கு போன் செய்து தனது மனைவிக்கு தொல்லை கொடுக்க வேண்டாம் என்று கூறியுள்ளார். ஆனால் வேல்சாமி கேட்கவில்லை.
இதையடுத்து தனது கணவரின் அறிவுரைப்படி லலிதா வேல்சாமிக்கு போன் செய்து தன்னை பார்க்க திருப்பூர் ரயில் நிலையத்திற்கு வருமாறு கூறியுள்ளார். இதனால் மகிழ்ச்சி அடைந்த வேல்சாமி கடந்த 17ம் தேதி திருப்பூர் வர அவரை லலிதாவும், கருப்பசாமியும் சேர்ந்து தங்களின் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
வேல்சாமியை தனது வீட்டிற்கு அருகே வைத்து கருப்பசாமி தனது நண்பர்கள் ஆட்டோ டிரைவர்களான பலவஞ்சிபாளையத்தை சேர்ந்த கார்த்திக் (20), காலேஜ் ரோடு அமர்ஜோதி நகரை சேர்ந்த ஜோசப் (33), பி.என்.ரோடு இளங்கோ நகரை சேர்ந்த நவீன்குமார் (19), போயம்பாளையம் அவினாசி நகரை சேர்ந்த லோகநாதன் (20), கருவம்பாளையத்தை சேர்ந்த முத்துக்குமார் (27) ஆகியோருடன் சேர்ந்து தாக்கியுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த வேல்சாமியை சாலையோரம் வீசிவிட்டு சென்றுவிட்டனர். அந்த வழியாக வந்த பொதுமக்கள் பார்த்து அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வேல்சாமி இறந்துவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கருப்பசாமி உள்பட 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.