பார்க்க 'பயங்கர' போட்டியாக தெரிந்தாலும்... நிஜமான மோதல் 6 கட்சிகளுக்கு இடையேதான்..!
சென்னை: தமிழகத்தில் இந்த சட்டசபைத் தேர்தல் இதுவரை இல்லாத சூட்டையும், பரபரப்பையும் கிளப்பி விட்டுள்ளது. பலமுனைப் போட்டியை இது உருவாக்கியுள்ளது. இருப்பினும் சற்று உற்றுப் பார்த்தால் நிஜமான போட்டி 6 கட்சிகளுக்கு இடையேதான் நிலவுகிறது.
தமிழகத்தில் கிட்டத்தட்ட முக்கியக் கட்சிகள் அனைத்தும் தனி கூட்டணியை அல்லது தனித்து போட்டியிடுகின்றன. இதற்கு முன்பும் இதுபோன்ற போட்டியை தமிழகம் கண்டுள்ளது என்ற போதிலும் இந்த முறை கூட்டணிகளும், கட்சிகளும் அதிகமாகியுள்ளதால் போட்டிக் களம் படு சூடாக உள்ளது.
பல கூட்டணிகள், கட்சிகள் கண்ணுக்குத் தெரிந்தாலும் கூட நிஜமான போட்டி என்பது 6 முக்கியக் கட்சிகளுக்கு இடையேதான் காணப்படுகிறது. அதுகுறித்துப் பார்ப்போம்.
விறுவிறுப்பான தேர்தல் களம்
தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் தொடங்கி விட்டதால், தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கட்சியினர், வேட்பாளர்கள் தெருத் தெருவாக வலம் வர ஆரம்பித்துள்னர் ஓட்டு கேட்டு.
வரலாறு காணாத கூட்டணிகள்
இந்த சட்டசபைத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு ஏகப்பட்ட கூட்டணிகள் களத்தில் உள்ளன. திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக-தமாகா- மக்கள் நலக் கூட்டணி ஆகியவை தனித் தனியாக கூட்டணி அமைத்துள்ளன.
தைரியமாக தனித்து நிற்கும் கட்சிகள்
இவை தவிர பாமக, நாம் தமிழர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகியவை தனித்துப்போட்டியிடுவதாக அறிவித்து வேட்பாளர்களையும் அறிவித்து தங்கள் பாதையில் தைரியமாக நடை போட்டு வருகின்றன.
குட்டியூண்டு கூட்டணிகள்
இதுதவிர நடிகர் கார்த்திக்கின் தலைமையில் விடியல் கூட்டணி என்ற பெயரில் ஒரு குட்டிக் கூட்டணியும் இந்தத் திருவிழாவில் உலா வருகிறது. பகுஜன் சமாஜ் போன்ற சின்னக் கட்சிகளும் உள்ளன.
போட்டின்னு பார்த்தா
ஆனால் 234 தொகுதிகளிலும் யாருடன் யார் மோதல் என்று பார்த்தால் 6 கட்சி அல்லது கூட்டணியைத்தான் சுட்டிக் காட்ட முடிகிறது. அவை திமுக, அதிமுக, தேமுதிக-தமாகா- மக்கள் நலக் கூட்டணி, பாமக, பாஜக, நாம் தமிழர் ஆகியவைதான். இந்த 6 பேர்தான் தமிழகம் முழுவதும் தேர்தல் களத்தில் உள்ளனர்.
இன்னொரு முக்கியஸ்தர்.. நோட்டா!
இவர்கள் தவிர தமிழக தேர்தல் களத்தில் உள்ள இன்னொரு முக்கியஸ்தர் நோட்டா. அனைத்து வாக்குப் பதிவு இயந்திரங்களிலும் இந்த நோட்டாவும் தவறாமல் இடம் பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தனை பேர் போட்டியில் இருப்பதால் வாக்குகள் சிதறும் நிலை உள்ளது. இதனால் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பதும் கணிக்க முடியாததாக உள்ளது.