ஐகோர்ட் நீதிபதிகளாக 6 பேர் இன்று பதவி ஏற்பு.. இந்திரா பானர்ஜி பதவிப் பிரமாணம்
சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளாக 6 பேர் இன்று பதவி ஏற்றனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் 6 புதிய நீதிபதிகள் பதவியேற்றனர். இதனையடுத்து, உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாக பணியாற்றி வந்த அப்துல் குத்தாஸ், தண்டபாணி, ஆதிகேசவலுவும், பவானிசுப்புராயன், ஜெகதீஷ் சந்திரா, ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக இன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொறுப்பேற்றனர்.
இவர்களுக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை 54ஆக உயர்ந்துள்ளது.
காலிப் பணியிடங்கள்
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளையோடு சேர்த்து மொத்த நீதிபதிகள் எண்ணிக்கை 75-ஆக இருக்க வேண்டும். ஆனால் நீதிபதிகளின் எண்ணிக்கை 48ஆக இருந்த நிலையில், காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்தது.
பரிந்துரை
இதனையடுத்து, உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களாக பணிபுரிந்து வரும் எம்.தண்டபாணி, பவானி சுப்புராயன், ஜெகதீஷ் சந்திரா, ஆதிகேசவலு, அப்துல் குத்தூஸ், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகிய 6 வழக்கறிஞர்களை நீதிபதிகளாக நியமனம் செய்ய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி குழு பரிந்துரை செய்தது.
உத்தரவு
உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்ட அந்த பரிந்தரை பட்டியல், சட்ட அமைச்சகத்தின் மூலம் பிரதமர் அலுவலத்திற்கு அனுப்பப்பட்டது. பிரதமர் அலுவலகமும் ஒப்புதல் அளித்ததையடுத்து, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவர்களது நியமனத்திற்கான உத்தரவை கடந்த 22ம் தேதி பிறப்பித்தார்.
பதவி ஏற்பு
இதனையடுத்து, இன்று பதவி ஏற்பு நிகழ்ச்சி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. தற்போது 6 நீதிபதிகள் பதவி ஏற்றுக் கொண்ட நிலையில் மீதம் உள்ள 21 பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.