சென்னை ஹைகோர்ட்டுக்கு புதிய நீதிபதிகள் நியமனம்!
சென்னை ஹைகோர்ட்டுக்கு புதிதாக 6 நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லி: சென்னை ஹைகோர்ட்டுக்கு புதிதாக 6 நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நீதிபதிகளை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாக பணியாற்றி வரும் ஜெகதீஷ் சந்திரா, தண்டபாணி, அப்துல் குத்துஸ், ஆதிகேசவலு, பவானிசுப்பராயன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகிய 6 பேரையும் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். 6 புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளதையடுத்து, சென்னை ஐகோர்ட் நீதிபதிகளின் எண்ணிக்கை 54-ஆக உயர்ந்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளையோடு சேர்த்து மொத்த நீதிபதிகள் எண்ணிக்கை 75-ஆக இருக்க வேண்டும். ஆனால் தற்போது இந்த எண்ணிகை 48தான் உள்ளது.
இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்தது. இந்நிலையில் தற்போது உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களாக பணிபுரிந்து வரும் எம்.தண்டபாணி, பவானி சுப்புராயன், ஜெகதீஷ் சந்திரா, ஆதிகேசவலு, அப்துல் குத்தூஸ், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகிய 6 வழக்கறிஞர்களை நீதிபதிகளாக நியமனம் செய்ய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி குழு பரிந்துரை செய்தது.
உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்ட அந்த பரிந்தரை பட்டியல், சட்ட அமைச்சகத்தின் வாயிலாக பிரதமர் அலுவலத்திற்கு அனுப்பப்பட்டது. பிரதமர் அலுவலகமும் ஒப்புதல் அளித்ததையடுத்து, குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களது நியமனத்திற்கான உத்தரவை தற்போது பிறப்பித்துள்ளார்.
தற்போது 6 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் மீதம் உள்ள 21 பணியிடங்களையும் விரைவில் நிரப்ப வேண்டும் என வழக்கறிஞர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. புதிய நீதிபதிகள் விரைவில் பதவியேற்பார்கள் என கூறப்படுகிறது.