கல்லூரி பேருந்து – பள்ளி வேன் விபத்து… 6 பேர் பலி
கரூர்- குமரி: தமிழகத்தில் இருவேறு இடங்களில் ஏற்பட்ட விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் இதில் நால்வர் மாணவர்கள் ஆவர் . 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வலையாபாளையம் கிராமம் அருகே தனியார் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த பேருந்து ஒன்று மாணவர்களை கல்லூரிக்கு ஏற்றிக்கொண்டு வந்தது. அப்போது
லாலா பேட்டையை அடுத்த பொய்கை புத்தூர் அருகே வந்து கொண்டிருந்த போது, எதிரே வந்து கொண்டிருந்த சரக்கு வேன் நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் சிறுகமணியைச் சேர்ந்த மாணவி ரிசானாபானு, கோகிலா, ரோஷ்னி பிரியா உள்ளிட்ட மூன்று மாணவிகள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயம் அடைந்த வேன் டிரைவர் உட்பட 16 பேர் சிகிச்சைக்காக கருர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மாயனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சலையில் சுமார் ஒருமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பாமகவை மாநில துணைப் பொதுச்செயலாளர் பி.எம்.கே பாஸ்கரன், மாணவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்திற்கு தலா. ரூ. 10 லட்சம் விபத்து நிவாரணத் தொகை வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஒரே கல்லூரியைச் சேர்ந்த மூன்று மாணவிகள் உயிரிழந்த சம்பவம் கரூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி வேன் விபத்து
குமரி மாவட்டம் கருங்கல் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து 3 பேர் பலியாகியுள்ளனர். 10 மாணவிகள் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். கருங்கல் பகுதியில் உள்ள தனியார் பள்ளி வேன் மாணவிகளை ஏற்றி கொண்டு, புதுக்கடை நோக்கி சென்றது. இந்நேரத்தில் நிலைதடுமாறி வேங்கோட்டில் உள்ள ஒரு கால்வாயில் விழுந்தது. இதில் டிரைவர் ஜெனீஸ் (வயது 30 ), கால்வாயில் குளித்து கொண்டிருந்த திலகவதி, மாணவி ஒருவர் ஆகிய மூவர் உயிரிழந்தனர். காயமடைந்த 10 மாணவிகள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.