சென்னை கலவரம்.. தீவைப்பில் ஈடுபட்டதாக கூறி கைதான 60 பேருக்கு 15 நாட்கள் சிறை!
சென்னையில் வன்முறை தீவைப்பு சம்பவங்களில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்ட 60 பேரை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: தமிழக தலைநகரான சென்னையில் நேற்று மிகப்பெரிய அளவில் வன்முறை வெடித்தது. கல்வீச்சு காவல்நிலையம் எரிப்பு சம்பவங்கள் நடைபெற்றன. காவல்துறை தடியடி நடத்தியதில் பலர் காயமடைந்தனர்.
ஐஸ்ஹவுஸ் போலீஸ் நிலையம் மீது சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில், 50 வாகனங்கள் தீக்கிரையாகின. போலீஸ் நிலையமும் தீ வைக்கப்பட்டது. அங்கு இருந்த போலீசாரை, ஜன்னலை உடைத்து காப்பாற்றினர்.
எம்.கே.பி. நகரில் மர்மநபர்கள் டெம்போ வேனை தீவைத்துக் கொளுத்தினர். இதையடுத்து வியாசர்பாடியில் இருந்து தீயணைப்பு வண்டி வந்தது. தீயை அணைக்க முற்படும்போது சிலர் தீயணைப்பு வண்டியையும் கொளுத்தினர். இதில் தீயணைப்பு வண்டியின் முன்பக்கம் எரிந்து நாசமானது. போலீஸ் டெம்போ வேன் முற்றிலும் எரிந்தது நாசமானது.
அரும்பாக்கம் நூறடி சாலை எம்எம்டிஏ பேருந்து நிறுத்தம் அருகே 50க்கும் மேற்பட்டோர் கலவரத்தில் ஈடுபட்டனர். அவர்களை அரும்பாக்கம் இன்ஸ்பெக்டர் கண்ணன் கலைந்துபோகும்படி கூறினார். இதில் ஆத்திரமடைந்த கும்பல் இன்ஸ்பெக்டரை தாக்கியது. மேலும் அங்கிருந்த போலீஸ் டெம்போ வேனை தீ வைத்து எரித்தது.
மதுபானக் கடை எரிப்பு, காவல் நிலைய எரிப்பு தொடர்பாக 60 பேர் கைது செய்யப்பட்டனர். இரு குழுக்களாக கைது செய்யப்பட்ட 60 போரையும் 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை சர்மா நகரில் மதுபானக் கடையை எரித்ததாக 31 பேர் கைது செய்யப்பட்டனர்.
போலீஸாரே தீவைத்ததாக வீடியோ ஆதாரத்துடன் பரபரப்பு புகார்கள் உலா வரும் நிலையில் போலீஸார் கைது செய்த 60 பேருக்கும் சிறைக் காவல் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.