சென்னை சாப்ட்வேர் இன்ஜினியர் வீட்டில் ரூ.12 லட்சம் நகைகள் கொள்ளை!
சென்னை: வீடு புகுந்து ரூ.12 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
சென்னை நங்கநல்லூர் எம்.எம்.டி.சி. காலனியை சேர்ந்தவர், ராகவன் மகன், கிருஷ்ணா. இவரது மனைவி ஸ்ரீ வித்யா. இருவருமே சாப்ட்வேர் இன்ஜினீயர்களாகும். இருவரும் சிறுசேரியில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்கள்.
நேற்று இரவு கிருஷ்ணா மற்றும் அவரது மனைவி முதல் தளத்திலும், ராகவன் தரைத்தளத்திலும் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு நேரத்தில் கொள்ளை கும்பல் ஒன்று, ஜன்னல் வழியாக கைவிட்டு கதவை திறந்து கொண்டு வீட்டுக்குள் நுழைந்துள்ளது.
தரைத்தளத்தில் எதுவும் கிடைக்காததால், முதல் தளத்திற்கு கொள்ளையர்கள் சென்றுள்ளனர். அங்குள்ள கபோர்ட் திறந்த நிலையிலேயே இருந்துள்ளது. அதற்குள் இருந்த, வைர நெக்லஸ், வைரத் தோடு உள்பட 60 சவரன் நகைகளை கொள்ளையர்கள் அபேஸ் செய்தனர். ரூ.1 லட்சம் ரொக்கம், அரைக்கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் லேப்டாப்பும் திருடப்பட்டுள்ளது.
திருடப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.12 லட்சமாகும். இன்றுகாலை விழித்து பார்த்தபோதுதான், கொள்ளை சம்பவம் பற்றி கிருஷ்ணாவின் குடும்பத்தாருக்கு தெரியவந்தது. இதுகுறித்து பழவந்தாங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.