14 வயது குழந்தைக்கு “குழந்தை” கொடுத்த 65 வயது ஆதரவற்றோர் இல்ல நிர்வாகி- கைது
சென்னை: சென்னையில் ஆதரவற்றோர் இல்லம் ஒன்றில் தங்கிப் படித்து வந்த 8ம் வகுப்பு மாணவிக்கு குழந்தை பிறந்ததையடுத்து அவ்விடுதியின் நிர்வாகி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவான்மியூர் அருகே உள்ள செம்மஞ்சேரியை சேர்ந்த பாஸ்கர், அவர் மனைவி சரோஜா. இவர்களுக்கு 8ம் வகுப்பு படிக்கும் குழந்தை ஒருவர் உள்ளார்.
கவிதா 5 வயது குழந்தையாக இருக்கும்போது பாஸ்கர் மனைவியை பிரிந்து தனியாக சென்று விட்டார். இதனால் குழந்தையை மாடம்பாக்கம் அருகே உள்ள லூத்தனஞ்சேரியில் இருக்கும் ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்தார்.
"வல்லமை தாராயோ" என்ற பெயரில் இயங்கி வந்த இந்த இல்லத்தை பால்இமானுவேல் என்பவர் நடத்தி வந்தார். இங்கு தங்கி அச்சிறுமி அருகே உள்ள அரசு பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தாள்.
இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் பால் இமானுவேல் போலி ஆவணங்கள் மூலம் காப்பகத்தை நடத்துவதாக மகளிர் ஆணையம் மூலம் போலீஸ் கமிஷனருக்கு புகார் வந்தது. கமிஷனர் உத்தரவின் பேரில் சேலையூர் போலீசார் காப்பகத்தை சோதனையிட்டனர்.
போலி ஆவணம் மூலம் காப்பகம் நடத்தி வந்தது தெரியவந்ததால் காப்பகம் மூடப்பட்டது. காப்பகம் நடத்தி வந்த பால்இமானுவேல், அவரது மனைவி ஜோதிபிளஸ்சிங், தந்தையும், டிரஸ்ட் நிர்வாகியுமான 65 வயதான பிரபுதாஸ் ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
காப்பகத்தில் தங்கியிருந்த 9 குழந்தைகள் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். மாணவியும் அவரது தாயிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இந்த நிலையில் கர்ப்பமாக இருந்த அச்சிறுமி திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் மகப்பேறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார். நேற்று அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. 14 வயது சிறுமி குழந்தை பெற்றது குறித்து சேலையூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தியபோது கர்ப்பத்துக்கு காப்பக நிர்வாகி பிரபுதாஸ் காரணம் என கூறியதாக தெரிகிறது. இதையடுத்து பிரபுதாசை சேலையூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.